மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தனி வார்டு


மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தனி வார்டு
x
தினத்தந்தி 29 Jan 2020 11:42 AM GMT (Updated: 29 Jan 2020 11:42 AM GMT)

மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை

கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் 106 பேர்  பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி திங்கட்கிழமை முடிவில், சீனாவின் வுகானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,515 ஆக இருந்தது. உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள்  பெரும்பாலானவை ஹூபே மாகாணத்தில் உள்ளன, அங்குதான் வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்டது. ஒரு நாளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் இந்த பாதிப்பு பரவி உள்ளது.

சீனாவில் இருந்து வருவோரை கண்காணிக்க நாடு முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து வருவோரையும் முழுமையாக பரிசோதித்து கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் மத்திய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 8 படுக்கைகள் போடப்பட்டுள்ளது. இந்த வார்டில் சிகிச்சை அளிக்க 2 நுரையீரல் சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், 2 பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள், பொது மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

Next Story