சமூக வலைதளங்களில் ஆபாச கருத்து பதிவிட்டால் இனி தப்ப முடியாது; சிறப்பு பிரிவு அமைக்க நீதிமன்றம் உத்தரவு


சமூக வலைதளங்களில் ஆபாச கருத்து பதிவிட்டால் இனி தப்ப முடியாது;  சிறப்பு பிரிவு அமைக்க  நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 30 Jan 2020 12:34 PM GMT (Updated: 30 Jan 2020 12:34 PM GMT)

சமூக வலைதளங்களில் ஆபாச கருத்து பதிவிட்டால் இனி தப்ப முடியாது, ஆபாச கருத்துக்கள் பதிவிடுபவர்களை கண்டறிய போலீஸ் நிலையத்தில் சிறப்பு பிரிவு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை

சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக சில கருத்துகளை பதிவிட்டு இருந்தார்.

இது தொடர்பாக அவரை போலீசார்  கைது செய்தனர். இந்த நிலையில் அவர் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சமூக வலைதளங்களில் கடுமையாக ஆபாச வார்த்தைகளால் அவதூறாக கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த  வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, இது போன்று சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எந்த ஒரு முறையான நடைமுறையும் இல்லை என தெரிவித்தார்.

இதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் தனி நபர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்த அவர் அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது எனவும் தெரிவித்தார். எனவே, சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டறிய மாவட்ட மற்றும் மாநில அளவில் அனைத்து காவல்நிலையங்களிலும் 2 மாதத்திற்குள் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டார்.

அவதூறாகவும் கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டறியும் நிபுணத்துவத்தை சிறப்பு பிரிவில் நியமிக்கப்படுவோருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 30-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும், தன்னுடைய பதிவுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் மருதாசலத்துக்கு ஜாமீன் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story