ஏ.சி. பஸ்களில் போர்வை வழங்குவது நிறுத்தம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
ஏ.சி. பஸ்களில் போர்வை வழங்குவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
போக்குவரத்துத்துறையில் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள மாநகர் போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘வரும் முன் காப்போம்’ என்ற அடிப்படையில் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகிற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களை சேர்ந்த 21 ஆயிரத்து 92 பஸ்கள் அனைத்தும் கடந்த 9-ந் தேதி முதல், முறையாக கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தபின்னரே இயக்கப்படுகிறது.
அரசு மற்றும் தனியார் ஏ.சி. பஸ்களில் திரைச்சீலைகள் அகற்றப்பட்டு, ஏ.சி. அளவு குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் போர்வைகள் வழங்குவதும் பயணிகளின் நலன் கருதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் போர்வைகளை தாங்களே கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story