கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா வைரஸ் பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்திலும் இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 39 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் குணமாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய 2 பேர், கொரோனா தொற்றுக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். சென்னை போரூரை சேர்ந்த அவர்கள் இருவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இரண்டு முறை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நோய் தொற்று இல்லை என முடிவுகள் வெளிவந்து உள்ளன. அவர்களுக்கு கொரோனா இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
அவர்கள் இரண்டு பேரும் அடுத்த 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர். இருவரையும் மீட்டு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு நன்கு கவனித்து கொண்ட மருத்துவமனை டீன் மற்றும் மருத்துவ குழுவுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் பதிவிட்டு உள்ளார். இதனால் சிகிச்சைக்கு பின் இதுவரை 4 பேர் குணமடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story