ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை;ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல -மருத்துவ நிபுணர் குழு


ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை;ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல -மருத்துவ நிபுணர் குழு
x
தினத்தந்தி 29 Jun 2020 7:52 AM GMT (Updated: 29 Jun 2020 7:52 AM GMT)

ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை;ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல என முதல்-அமைச்சருடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு, தேவையான ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை வழங்கும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தலைமையில் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு, தாங்கள் செய்த ஆய்வுகளின் அடிப்படையிலான முடிவுகளை, முதல்அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்து செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வறிக்கையை அளித்து வருகிறது. அதன் அடிப்படையில் தமிழக அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட சில முக்கிய மாவட்டங்களிலும் ஊரடங்குக்குள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாளை (செவ்வாய்க்கிழமை) நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது.

சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெர்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மருத்துவ நிபுணர்கள் குழுவினர் தங்கள் ஆலோசனைகளை, எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் முக்கிய முடிவுகள் குறித்து தமிழக அரசு அறிவிக்க உள்ளது

இந்த நிலையில் மருத்துவக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது:

ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை. ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல. அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை. பொது போக்குவரத்தால் நோய் பரவல் ஏற்படுவதாக அரசிடம் தெரிவித்துள்ளோம். பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க பரிந்துரை செய்து உள்ளோம். 

சென்னையில் ஊரடங்கு காரணமாக நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவ முறைகளை கையாள திட்டமிட்டு உள்ளோம்.

சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் காலம் குறைந்துள்ளது,  நோய் கண்டறிதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதே இதற்கு காரணம் என கூறி உள்ளனர்.

Next Story