ஒரு நாளைக்கு முன்பு அறிக்கை வெளியிட்டுவிட்டு நான் சொல்லித்தான் அரசு செய்தது என்பதா? - மு.க.ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி


ஒரு நாளைக்கு முன்பு அறிக்கை வெளியிட்டுவிட்டு நான் சொல்லித்தான் அரசு செய்தது என்பதா? - மு.க.ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி
x
தினத்தந்தி 30 Jun 2020 10:00 PM GMT (Updated: 30 Jun 2020 9:09 PM GMT)

மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடும் போது, ஒரு நாளைக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு விட்டு நான் சொல்லி தான் அரசு செய்தது என்பதா? என்று மு.க.ஸ்டாலினுக்கு ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்னை எழிலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரமருடனான கலந்தாய்வு, மருத்துவ நிபுணர் குழுவுடன் கலந்தாய்வு, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆய்வு மற்றும் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழுக்களுடனான ஆய்வு போன்ற பல்வேறு நிலைகளில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, அந்த ஆய்வின் அடிப்படையில்தான் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மத்திய அரசு வழங்குகின்ற வழிகாட்டுதல்களின் அடிப்படையிலும், தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

அரசு எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தான் சொல்லும் ஆலோசனைகளை முதல்-அமைச்சரோ, தமிழக அரசோ கேட்கவில்லை என பழியை சுமத்துகிறார். அவருக்கே ஆலோசனை வழங்க வாடகைக்கு ஆள் பிடித்திருக்கும் நிலையில், அவர் எவ்வாறு அரசுக்கு நல்ஆலோசனைகளை வழங்க முடியும்? கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை ஒழித்து மக்களிடம் நல்லபெயர் பெற்றுவிட்டால், மக்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கைகளைப் பெற்றுவிடுவோம் என்பதால், தினசரி 10 அறிக்கைகள் விடுத்து அறிக்கை மன்னனாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில், வெளியில் வந்து மக்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஏன்? தற்போது வீட்டுக்குள்ளே முடங்கி நாள்தோறும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்?

முதல்-அமைச்சர் ஏதாவது மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு ஒரு நாளைக்கு முன்போ அல்லது ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவோ இவர் (மு.க.ஸ்டாலின்) ஒரு அறிக்கையை வெளியிட்டு, நான் சொல்லித்தான் இந்த அறிக்கை வந்துள்ளது என ஒரு தவறான தகவலை மக்களிடத்திலே ஏற்படுத்தி வருகிறார்.

பாரத்நெட் டெண்டர் திட்டம் என்பது ஏறத்தாழ தமிழ்நாட்டில் உள்ள 12,544 கிராம ஊராட்சிகளை கண்ணாடி இழை மூலம் இணைக்கும் திட்டமாகும். இந்தத் திட்டம் நிறைவேறினால் எஸ்.சி.வி. போன்ற கேபிள் டிவி நிறுவனங்களின் எதிர்காலமெல்லாம் கேள்விக்குறியாகிவிடும்.

ஆகவே, இந்த இன்டர்நெட் வசதியோடு, கேபிள் டிவி வசதியும் கிடைப்பதை ஆரம்ப நிலையிலே முடக்குவதற்காக இதுவரை 100 முறை இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் அறிக்கை கொடுத்திருக்கிறார். கோர்ட்டுக்கும் எடுத்துச் சென்றனர். கோர்ட்டில், இது ஊழல் என்று வழக்கு தொடுத்து குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டது. ஒப்பந்தப்புள்ளியே விடப்படாத, ஒதுக்கப்படாத இந்தத் திட்டத்தில் எப்படி முகாந்திரமில்லாமல் குற்றம் சாட்டுகின்றீர்கள் என்று கேட்ட கேள்விக்கு மூக்கறுபட்டு கோர்ட்டில் இருந்து வழக்கை வாபஸ் பெற்றார். மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். காலத்திலேயே, வாங்காத கப்பலுக்கு கப்பல் ஊழல் என்று தமிழகம் முழுவதும் பேச வைத்தவர்கள் தி.மு.க.வினர். 5 முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை. அதனால் தான் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து தமிழகத்தில் மக்களுக்கு சேவைகளை செய்து வருகிறது. பாரத் நெட் திட்டத்தில் மிக விரைவாக டெண்டர் விடப்பட்டு 2021 பிப்ரவரிக்குள் பணிகள் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story