புதிய தொழிற்சாலைகள் தொடங்க இடர்பாடுகள் இருந்தால் களையப்படும் - தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம், எடப்பாடி பழனிசாமி உறுதி


புதிய தொழிற்சாலைகள் தொடங்க இடர்பாடுகள் இருந்தால் களையப்படும் - தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம், எடப்பாடி பழனிசாமி உறுதி
x
தினத்தந்தி 15 July 2020 10:15 PM GMT (Updated: 15 July 2020 8:36 PM GMT)

புதிய தொழிற்சாலைகள் தொடங்க இடர்பாடுகள் இருந்தால் அதை களைய உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இது ஒரு சோதனையான நேரம். இன்று உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு அரசு சில வழிமுறைகளை அறிவித்து, அதனை பின்பற்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதன் மூலமாக நோய்ப் பரவலை ஓரளவிற்கு நாம் தடுத்திருக்கின்றோம்.

இந்த இடைப்பட்ட காலத்தில் தொழிற்சாலைகள் இயங்குவது தடைபட்டிருக்கிறது. இந்த நோய்ப் பரவலைத் தடுக்கின்ற வழிமுறைகளை அரசு கண்டறிந்து அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்த காரணத்தினாலே, ஊரடங்கு தளர்த்தப்பட்டு, சென்னையைத் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் 100 சதவீதப் பணியாளர்களை வைத்து தொழிற்சாலைகள் இயங்கலாம் என்ற அறிவிப்பு கொடுத்து, தொழிற்சாலைகள் எல்லாம் தற்போது இயங்கி வருகின்றன. இருந்தாலும், இன்னும் சில கட்டுப்பாடுகளை நாங்கள் வைத்திருக்கின்றோம். ஏனென்றால், இது ஒரு புதிய நோய், இது எவ்வாறு ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகின்றது என்பதை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில், உயிர் முக்கியமாக இருப்பதால், அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு முக்கியம். எனவேதான், இவ்வளவு கட்டுப்பாடுகளோடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

20 சதவீத கடனுதவி

அரசைப் பொறுத்தவரை தொழிற்சாலைகள் நன்றாக இயங்க வேண்டும், மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையிலே தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை தொழிலதிபர்கள் கவனமாகக் கையாள வேண்டும். இல்லையெனில், தொழிலாளர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுவிடும். அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை அனைத்துத் தொழிற்சாலைகளும் பின்பற்ற வேண்டும்.

ஏனென்றால், இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருப்பதினால், இது, நாம் ஒவ்வொருவரும் அக்கறையோடு செயல்பட வேண்டிய நேரம். அதனால் தொழிலதிபர்கள் தங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்களுக்கு தக்க பாதுகாப்பு செய்து தர வேண்டும். அதுமட்டுமல்லாமல், மத்திய அரசாங்கம் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் இயங்குவதற்கு தேவையான கடனுதவிகளை அறிவித்திருக்கிறது. இதனை வங்கி மேலாளர்களும் தெரிவித்தார்கள். ஓசூர் தொழிற்பேட்டையில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு இதுவரை சுமார் ரூ.139 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக சொன்னார்கள். 20 சதவீத கடனுதவி வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பின்படி, வங்கி கடனுக்கு விண்ணப்பித்த குறு, சிறு, நடுத்தரத் தொழில்களில் பெரும்பாலானவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், தேவையான கடனுதவியை வழங்குவதற்கு வங்கிகள் தயாராக உள்ளன.

இடர்பாடுகள் இருந்தால் நடவடிக்கை

பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முனைப்பு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு அரசாங்கமும் நிலம், மின்சாரம் போன்ற தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறது. புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு உடனடியாக அனைத்து அனுமதிகளும் கிடைப்பதற்கு, ஒற்றை சாளர முறையை ஏற்படுத்தி அதனை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். புதிய தொழிற்சாலைகள் தொடங்க முன்வந்து, அவர்களுக்கு ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் அதனைக் களைவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தொழில் புரிபவர்களுக்கு தேவையான உதவிகளை முழுமையாக செய்ய அரசு தயாராக உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.33 கோடியில் கட்டப்பட்டுள்ள கந்தம்பட்டி 4 வழிச்சாலை மேம்பாலம், பேளூர்- கிளாக்காடு -தும்பல் அருகில் கூட்டாற்றின் குறுக்கே ரூ.3 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம், ஓமலூர் - சங்ககிரி -முத்துநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் சரபங்கா நதியின் குறுக்கே ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் ஆகியவற்றை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, “சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நீர் பங்கீடு நமக்கு கிடைக்கும். நேற்றைய தினம் (நேற்றுமுன்தினம்) காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவில் நம்முடைய கோரிக்கையை வைத்திருக்கிறோம். அவர்கள் பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறார்கள். நமக்கு கிடைக்கவேண்டிய பங்கு நீரை பெறுவதற்கு அரசால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.“ என்று கூறினார்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுவிட்டு மாலையில் சேலத்துக்கு வரும்போது பலத்த மழை பெய்தது. இதனால் கந்தம்பட்டி பாலம் திறப்பு விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மழையில் நனைந்தவாறு நின்றிருந்தனர்.

சரியாக 5.15 மணிக்கு பாலத்தை திறந்து வைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு வந்தார். அப்போது, லேசாக சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Next Story