சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான மேலும் 2 போலீசாருக்கு கொரோனா தொற்று


சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான மேலும் 2 போலீசாருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 28 July 2020 3:39 AM GMT (Updated: 28 July 2020 3:39 AM GMT)

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் கைதான காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணை செய்த போது, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து சாத்தான்குள காவல் நிலையத்தில் பணியாற்றிய மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் காவலில் எடுத்து தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையை சிபிஐ போலீசார் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கனவே கடந்த 2 தினங்களுக்கு முன்பு  எஸ்.எஸ்.ஐ. பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதும் இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் 6 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story