நிலவில் சந்திரயானின் ரோவர் சேதமின்றி இருக்க வாய்ப்பு என்ஜினியர் சண்முக சுப்ரமணியன் தகவல்


நிலவில் சந்திரயானின் ரோவர் சேதமின்றி இருக்க வாய்ப்பு என்ஜினியர் சண்முக சுப்ரமணியன் தகவல்
x
தினத்தந்தி 3 Aug 2020 10:20 AM GMT (Updated: 3 Aug 2020 10:20 AM GMT)

நிலவில் சந்திரயானின் ‘லேண்டர்’ மோதி சிதறிய நிலையில் ‘ரோவர்’ வாகனம் சேதமின்றி இருக்க வாய்ப்பு: என்ஜினியர் சண்முக சுப்ரமணியன் தகவல் தெரிவித்து உள்ளார்.

சென்னை

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உலகிலேயே முதன் முறையாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய முடிவு செய்தது. இதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை ரூ.978 கோடி செலவில் வடிவமைத்தது. இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை 22-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க்.3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவில் தரையிறங்கி சோதனை செய்ய சந்திரயான்-2 விண்கலத்தில் விக்ரம் லேண்ட் ரோவர் கருவி பொருத்தப்பட்டு இருந்தது.

தொடர்ந்து 48 நாட்கள் பயணம் முடிந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி நிலவின் தரையில் இருந்து 2 கிலோ மீட்டர் உயரத்தில் தரையிறங்க முயற்சித்த போது வெற்றிகரமாக தரையிறக்கம் செய்ய இயலவில்லை. நிலவின் தென் துருவத்தை தொடுவதற்கு சற்று முன்பு நிலவின் தரையில் இருந்து 2 கிலோ மீட்டரில் சந்திரயான்-2 லேண்டர் விக்ரமுடன் தொடர்பை இழந்தது.

இந்தநிலையில் நிலவில் விக்ரம் லேண்டரின் நிலை என்ன? என்பது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வை தொடங்கினார்கள்.  தொடர் முயற்சியில் ரோவர் இருப்பிடத்தை இஸ்ரோ கண்டறிந்தாலும் அதை உறுதிசெய்வதில் சிரமங்கள் நீடித்தன. இந்த சூழலில் நிலவை சுற்றிவரும் நாசாவின் எல்ஆர்ஓ விண்கலம் எடுத்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அவற்றின் உதவிகொண்டு, லேண்டர் விழுந்த இடத்தில் இருந்து வடமேற்கில் 750 மீட்டர் தூரத்தில் உடைந்த பாகங்கள் தென்படுவதாக தமிழகத்தை சேர்ந்த என்ஜினியர் சண்முக சுப்ரமணியன் நாசாவுக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில், லேண்டர் விழுந்த இடம் மற்றும் உடைந்த பாகங்களை ஆய்வின் மூலம் நாசா உறுதிசெய்தது.

தற்போது கடந்த ஜனவரி மாதம் நிலவில் எடுத்த சில புகைப்படங்களை நாசா கடந்த மே மாதம் வெளியிட்டது. இந்த புகைப்படங்களுடன், கடந்த ஆண்டு வெளியான புகைப்படங்களையும் ஒப்பிட்டு சண்முக சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் அடிப்படையில் கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய தகவல்களை இஸ்ரோவுக்கும், நாசாவுக்கும் இ-மெயில் மூலம் அவர் அனுப்பி உள்ளார்.

சந்திரயான் விண்கலத்தின் ரோவர் சேதமடையாமல் இருந்திருக்கக் கூடும் என்ற புதிய தகவலை என்ஜினியர்  சண்முக சுப்ரமணியன் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், நிலவில் லேண்டர் வேகமாக சென்று மோதியதில், அதில் இருந்த ரோவர் வெளியேறி சில மீட்டர்தூரம் தள்ளி விழுந்துள்ளது. வேகமாக மோதியதால் லேண்டரின் சில பாகங்கள் மட்டுமே உடைந்து சிதறியிருக்கும். அதேநேரம் ரோவர் பாதிப்படையாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. கடந்த மே மாதம் நாசா வெளியிட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை ஆய்வு செய்ததில் இந்த தகவல்கள் கிடைத்தன. இதற்கு முன்பு கண்டறிந்த பாகங்களும் லேண்டரின் ஆய்வு சாதனங்களாகவே இருக்கக்கூடும். இதன் விவரங்களை இஸ்ரோ, நாசா மையங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சந்திரயான் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் கடந்த ஓராண்டாக நிலவை வெற்றிகரமாக சுற்றிவந்து ஆய்வு மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் கேட்டபோது, ‘‘இந்த விஷயத்தில் நாசாவிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. எனினும், பொறியாளர் சண்முக சுப்ரமணியன் அனுப்பிய மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றுள்ளது. எங்கள் வல்லுநர் குழுவினர் அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நிலவில் மோதிய பிறகும் லேண்டர், ரோவர் இடையே சில நாட்கள் வரை தகவல் தொடர்பு இருந்திருப்பது முந்தைய ஆய்வில் தெரியவந்தது. எனினும், லேண்டரின் பாகங்கள் சேதமடைந்ததால் அதனால் பூமியுடன் தொடர்பு கொள்ள முடியாமல் போயிருக்கலாம்’’ என்றனர்.


Next Story