"தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 4 Aug 2020 9:00 AM GMT (Updated: 4 Aug 2020 9:00 AM GMT)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிக அளவாகவே தொடர்வதால், மக்கள் மத்தியில் ஒரு வித அச்சமும், பதற்றமும் நிலவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தரப்பில் முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார்.  

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- 

தமிழகத்தில் நாள்தோறும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் பல இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவதை சரியாக பின்பற்றுவதில்லை என்றும் கொரோனாவின் அடுத்த அலையை தடுக்க பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் அரசு விதிமுறைகளை மக்கள் கடைபிடித்தாலே கொரோனாவில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளமுடியும். தமிழ்நாட்டில் நோய் எண்ணிக்கை  தற்போது குறைந்து வருகிறது என்பதற்காக மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.

மேலும், கொரோனா என்றாலே பீதியடையத் தேவையில்லை என்றும் ஆரம்பக்கால அறிகுறி தெரிந்தவுடன் அதற்கான சோதனைகளை நடத்தி உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதிலிருந்து மீளமுடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story