வெளிநாடுகளில் இருந்து 5 சிறப்பு விமானங்களில் 534 பேர் சென்னை வந்தனர்


வெளிநாடுகளில் இருந்து 5 சிறப்பு விமானங்களில் 534 பேர் சென்னை வந்தனர்
x
தினத்தந்தி 10 Aug 2020 2:08 AM GMT (Updated: 10 Aug 2020 2:08 AM GMT)

வெளிநாடுகளில் இருந்து 5 சிறப்பு விமானங்கள் மூலமாக 534 பேர் சென்னை வந்து சேர்ந்தனர்.

ஆலந்தூர்,

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கிய இந்தியர்கள், மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் இருந்து 5 குழந்தைகள், 29 பெண்கள் உள்பட 70 பேருடனும், சார்ஜாவில் இருந்து 11 குழந்தைகள், 38 பெண்கள் உள்பட 180 பேர்களுடனும், தோகாவில் இருந்து 7 குழந்தைகள், 38 பெண்கள் உள்பட 171 பேர்களுடனும், அபுதாபியில் இருந்து 3 குழந்தைகள், 20 பெண்கள் உள்பட 96 பேருடனும், இலங்கையில் இருந்து 17 பேருடனும் 5 சிறப்பு விமானங்கள் சென்னை வந்தன.

இந்த விமானங்களில் வந்த 534 பேருக்கு சென்னை விமான நிலையத்திலேயே குடியுரிமை மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை முடிந்ததும், அங்கேயே தமிழக பொது சுகாதார துறை சார்பில் கொரோனா பரிசோதனைக்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அனைவரும் அரசு பஸ்களில் சென்னையில் உள்ள கல்லூரி மற்றும் ஓட்டல்களில் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Next Story