கனிமொழியிடம் இந்தியரா? என கேட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் போலீசிடம் அதிகாரிகள் விசாரணை


கனிமொழியிடம் இந்தியரா? என கேட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் போலீசிடம் அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 11 Aug 2020 12:17 AM GMT (Updated: 11 Aug 2020 12:17 AM GMT)

பெண் போலீசுக்கு விமான நிலையத்தில் பணி எதுவும் வழங்காமல் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

ஆலந்தூர், 

தி.மு.க. மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி நேற்று முன்தினம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு சென்றார். அப்போது பாதுகாப்பு பகுதியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் போலீஸ் ஒருவர், இந்தியில் ஏதோ கூறினார். உடனே கனிமொழி, தனக்கு இந்தி தெரியாது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கூறினார். அப்போது பெண் போலீஸ், இந்தி தெரியாமல் இந்தியரா? என்று கேட்டதாக கனிமொழி தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இது பற்றி உரிய விசாரணை நடத்தப்படும் என மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று அந்த பெண் போலீசுக்கு விமான நிலையத்தில் பணி எதுவும் வழங்காமல் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மேலும் விமான நிலைய பாதுகாப்பு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் ஆகியவற்றையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முழுமையான விசாரணைக்கு பிறகு இதுபற்றி அறிக்கை தயார் செய்து உயர் அதிகாரிகளிடம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story