கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் டோனி பங்களிப்பு இன்றியமையாதது - மு.க.ஸ்டாலின்


கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் டோனி பங்களிப்பு இன்றியமையாதது - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 16 Aug 2020 2:12 AM GMT (Updated: 16 Aug 2020 2:12 AM GMT)

கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் டோனியின் பங்களிப்பு இன்றியமையாதது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

யாரும் எதிர்பாராத வகையில் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னையில் இருந்தபடி நேற்றிரவு அதிரடியாக அறிவித்தார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவர் தன் மீது அன்பு காட்டி ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். 2014-ம் ஆண்டின் இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனி இப்போது சர்வதேச ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கும் முழுக்கு போட்டுள்ளார். அவரது ஓய்வு அறிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களும் டோனியின் முடிவு குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வேதனையைத் தரும் செய்தியாகும்.

நெருக்கடியான தருணங்களிலும் தளராமல் வெற்றியை நோக்கி இந்திய அணியை வழிநடத்திய கேப்டன் கூல் அவர்!

கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. சர்வதேச கிரிக்கெட்டுக்குப் பிறகான அவரது வாழ்க்கை சிறப்புற அமைய வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உடன் டோனி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.


Next Story