மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்


மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
x
தினத்தந்தி 19 Aug 2020 11:13 AM GMT (Updated: 19 Aug 2020 11:13 AM GMT)

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்ம் எழுதியுள்ளார்.

சென்னை,

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு இன்று முதலமைச்சர் பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

"தேங்காய் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கின்றது. தமிழகத்தில் 4.40 லட்சம் ஹெக்டேரில் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் கொப்பரைத் தேங்காய் உள்ளிட்ட பல்வேறு வேளாண் விளைபொருட்களுக்கு விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் பரிந்துரையின்படி, மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து வருகிறது. 2020 ஆம் ஆண்டுக்கு ஒரு கிலோ கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.99.60 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

2018-ம் ஆண்டில் கஜா புயல் மற்றும் 2019-ம் ஆண்டில் ருகோஸ் வைட்ஃபிளை பூச்சித்தாக்குதல் ஆகியவற்றால் கடந்த இரு ஆண்டுகளாக தமிழகத்தில் தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அறுவடை, போக்குவரத்து, அறுவடை செய்யப்பட்டதை சேமித்தல் ஆகியவற்றுக்காக தென்னை விவசாயிகள் கணிசமான செலவுகளை செய்கின்றனர். மேலும், தற்போது கரோனா ஊரடங்கால் கூலித்தொழிலாளர்கள் பற்றாக்குறை, போக்குவரத்துத் தடைகள் ஆகியவற்றால் மேலும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் ஒரு கிலோ கொப்பரை தேங்காயின் சந்தை விலை ரூ.110 ஆக உள்ளது. இதனை கருத்தில் கொண்டால், கொப்பரை தேங்காய்க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆதார விலை ரூ.99.60 போதுமானதாக இருக்காது.

நெல், ராகி மற்றும் பருப்பு வகைகள் போன்ற பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சாகுபடி செலவில் 150% என இந்திய அரசு நிர்ணயித்துள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். எனவே, தென்னை விவசாயிகளுக்கும் போதுமான ஆதார விலையை வழங்க வேண்டும்.

எனவே, கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.99.60-லிருந்து ரூ.125 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு அந்த கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Next Story