இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்; அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்; அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 11 Sep 2020 7:12 PM GMT (Updated: 11 Sep 2020 7:12 PM GMT)

இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஆட்சியாக இருந்தாலும், கட்சியாக இருந்தாலும் எங்களுக்கு இருமொழிக் கொள்கை தான். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

டீ-சர்ட் ட்ரெண்டிங் மூலமாக தி.மு.க உண்மையை மறைக்க பார்ப்பதாக பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டியுள்ளனர். மொழி தொடர்பான கொள்கை மற்றும் அதன் நிலைப்பாட்டில் தி.மு.க.வினர் எந்த அளவில் இருக்கிறார்கள்? என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.

குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன்.

திரையரங்குகள் திறப்பது குறித்து மத்திய அரசு 8-ந் தேதி தான் ஆலோசனை நடத்தி உள்ளது. இதுவரை அதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அனுப்பவில்லை. மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை சொன்னாலும் இங்குள்ள நிலைமைகளை அறிந்து, அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து திரையரங்கை திறப்பது குறித்து முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் சினிமா துறையினருக்கு போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. 75 பேருடன் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டார்கள். அதற்கும் அரசு அனுமதி வழங்கியது. சின்னத்திரை படப்பிடிப்புக்கும் அரசு அனுமதி வழங்கியது. கொரோனா ஊரடங்கின் போது திரைப்பட நலவாரியத்தில் பதிவு செய்திருந்த 27 ஆயிரத்து 850 பேருக்கு ரூ.2,000 நிதியுதவி அளிக்கப்பட்டது. திரையரங்கு திறக்கப்படும்போது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கஷ்டம் ஏற்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story