புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு: முன்னாள் துணைவேந்தர்கள் 20 பேர் பிரதமருக்கு கடிதம்


புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு: முன்னாள் துணைவேந்தர்கள் 20 பேர் பிரதமருக்கு கடிதம்
x
தினத்தந்தி 13 Sep 2020 2:07 PM GMT (Updated: 13 Sep 2020 2:07 PM GMT)

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முன்னாள் துணைவேந்தர்கள் 20 பேர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு திமுக உட்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இதில் இடம் பெற்றுள்ள மும்மொழி திட்டத்தை ஏற்க முடியாது என்றும் தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே நீடிக்கும் என்றும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முன்னாள் துணைவேந்தர்கள் 19 பேர்  பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில்,

* ஐந்து வயதிற்கு முன்னதாக குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது குழந்தைகளின் நலனை பாதிக்கும்.  யு.எஸ்., யு.கே, சீனா மற்றும் ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகள் ஐந்து வயதிற்குப் பிறகுதான் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

* 3,5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டுவரும் நடைமுறை தேவையற்றது. அது குழந்தைகளின் நலனை  பாதிக்கும்.

* தொழில் கல்வி முறையை அறிமுகப்படுத்துவது மாணவர்களை தற்போதைய கல்வி முறையில் இருந்து   வெளியேற்றும் நடவடிக்கை ஆகும்.

* 5ம் வகுப்பு  வரை ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வருவது என்பது தேவையற்ற ஒன்று.

* உயர்கல்வி, இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கொண்டு வருவது மாணவர்களை உயர் கல்வி   பெறுவதைத் தடுக்கும்.

* இரண்டு ஆண்டுகள் கல்லூரியில் படித்து விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ்   வழங்கப்படும் என்பது முழுமையான கல்விக்கு வழிவகுக்காது.

* 5,000 குறைவாக மாணவர் எண்ணிக்கை கொண்ட கல்லூரிகள் மூடப்படும் என்பது கிராமப்புறங்களில் உள்ள  கல்லூரிகள் மூடப்படுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தி கிராமப்புற மாணவர்கள் உயர் கல்வி பயில்வதை தடுக்கும்  நடவடிக்கை ஆகும்.

* புதிய கல்விக் கொள்கையில் மற்ற மொழிகளை தாழ்த்தி சமஸ்கிருதத்தை ஊக்குவிப்பது போன்ற அம்சம்   இடம்பெற்றிருப்பது பன்மொழி தன்மை கொண்ட நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும்.

* இட ஒதுக்கீடு குறித்து தெளிவான அம்சங்கள் குறிப்பிடப்படவில்லை.

* தனியார் தேர்வு நிறுவனங்கள் பள்ளி அளவிலும், உயர்கல்வி அளவிலும் தேர்வுகள் நடத்துவதற்கு   ஈடுபடுத்தப்படும் என்பது தேர்வு முறைகள் குழப்பத்தை  உண்டாக்கும்.

* புதிய கல்விக் கொள்கை கல்வி, தற்போது மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களை முழுவதுமாக பறித்து   மத்தியில் அதிகாரங்களை குவிக்கின்ற நடவடிக்கையாக உள்ளது.

* புதிய கல்விக் கொள்கை வளரும் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்காமல் பழமைவாதத்திற்கு கல்வியை கொண்டு   சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

* புதிய கல்விக்கொள்கை அநீதி, சமத்துவமின்மை மற்றும் ஆரிய பாரம்பரியத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில்   உள்ளது.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story