தமிழகத்தில் கடந்த 30 நாட்களில் 1 லட்சத்து 63 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு


தமிழகத்தில் கடந்த 30 நாட்களில் 1 லட்சத்து 63 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 2 Oct 2020 10:15 PM GMT (Updated: 2 Oct 2020 9:27 PM GMT)

தமிழகத்தில் கடந்த 30 நாட்களில், 1 லட்சத்து 63 ஆயிரத்து 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய (வெள்ளிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 83 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,417 ஆண்கள், 2,178 பெண்கள் என மொத்தம் 5,595 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 7 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 109 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 705 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,278 பேரும், கோவையில் 495 பேரும், செங்கல்பட்டில் 396 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 17 பேரும், ராமநாதபுரத்தில் 15 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 73 லட்சத்து 4 ஆயிரத்து 809 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 6 லட்சத்து 8 ஆயிரத்து 885 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 3 லட்சத்து 67 ஆயிரத்து 546 ஆண்களும், 2 லட்சத்து 41 ஆயிரத்து 308 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 31 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 23 ஆயிரத்து 995 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 78 ஆயிரத்து 531 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். சென்னையில் மட்டும் 1 லட்சத்து 70 ஆயிரத்து 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 43 பேரும், தனியார் மருத்துவமனையில் 24 பேரும் என 67 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 18 பேரும், கோவையில் 8 பேரும், செங்கல்பட்டில் 6 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், திருப்பத்தூரில் 4 பேரும், சேலம், திருச்சி, ராணிப்பேட்டையில் தலா 3 பேரும், திண்டுக்கல், ஈரோடு, தஞ்சாவூர், வேலூரில் தலா இருவரும், திருவாரூர், தென்காசி, நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சியில் தலா ஒருவரும் என 20 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 9 ஆயிரத்து 586 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 30 நாட்களில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 2 ஆயிரத்து 45 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 603 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 925 பேரும், கோவையில் 637 பேரும், சேலத்தில் 476 பேரும் அடங்குவர். இதுவரையில் 5 லட்சத்து 52 ஆயிரத்து 938 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 46 ஆயிரத்து 294 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 924 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 954 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 298 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 638 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மேலும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 66 அரசு நிறுவனம், 122 தனியார் நிறுவனம் என மொத்தம் 186 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story