98 நாட்களுக்கு பின்னர் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் குறைவானது


98 நாட்களுக்கு பின்னர் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் குறைவானது
x
தினத்தந்தி 18 Oct 2020 10:18 PM GMT (Updated: 18 Oct 2020 10:18 PM GMT)

தமிழகத்தில், 98 நாட்களுக்கு பின்னர் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் குறைவானது. மேலும் இதுவரை 86 ஆயிரம் முதியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 88 ஆயிரத்து 643 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,319 ஆண்கள், 1,595 பெண்கள் என மொத்தம் 3,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில், 12 வயதுக்கு உட்பட்ட 12 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 90 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 1,036 பேரும், கோவையில் 319 பேரும், திருவள்ளூரில் 195 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 9 பேரும், தென்காசியில் 8 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 86 லட்சத்து 96 ஆயிரத்து 455 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 6 லட்சத்து 87 ஆயிரத்து 400 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 121 ஆண்களும், 2 லட்சத்து 72 ஆயிரத்து 247 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 32 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 25 ஆயிரத்து 67 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 86 ஆயிரம் முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 27 பேரும், தனியார் மருத்துவமனையில் 29 பேரும் என 56 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 17 பேரும், செங்கல்பட்டில் 7 பேரும், சேலம், கோவையில் தலா 5 பேரும், வேலூரில் 4 பேரும், திண்டுக்கலில் 3 பேரும், காஞ்சீபுரம், நாகப்பட்டினத்தில் தலா இருவரும், திருப்பூர், திருவாரூர், திருவண்ணாமலை, தேனி, தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நீலகிரி, மதுரை, கிருஷ்ணகிரி, தர்மபுரியில் தலா ஒருவரும் என 19 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 642 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 4 ஆயிரத்து 929 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,359 பேரும், கோவையில் 365 பேரும், செங்கல்பட்டில் 285 பேரும் அடங்குவர். இதுவரையில் 6 லட்சத்து 37 ஆயிரத்து 637 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 39 ஆயிரத்து 121 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story