பில்லி சூனியம் எடுப்பதாக ரூ.2 லட்சம் மோசடி போலி சாமியாரின் கூட்டாளிகள் 4 பேர் கைது


பில்லி சூனியம் எடுப்பதாக ரூ.2 லட்சம் மோசடி போலி சாமியாரின் கூட்டாளிகள் 4 பேர் கைது
x
தினத்தந்தி 24 Oct 2020 10:30 PM GMT (Updated: 24 Oct 2020 9:34 PM GMT)

பில்லி சூனியம் எடுப்பதாக கூறி தென்காசி டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த வழக்கில் போலி சாமியாரின் கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள போலி சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பூர்,

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா மீனாட்சிபுரம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் ராஜகுமாரன் (வயது 45). சொந்தமாக மினிவேன் வைத்து ஓட்டி வந்தார். இதற்கிடையில் சாமியார் ஒருவர், உனக்கு வேண்டாதவர்கள் பில்லி சூனியம் வைத்து உள்ளனர். அதை எடுக்காவிட்டால் உயிர் பலி ஏற்படும் என்று கூறினார்.

மேலும் பில்லி சூனியத்தை எடுக்க ரூ.2 லட்சம் மற்றும் 2 கோழிகளுடன் சென்னை வரும்படியும் கூறினார். அதை உண்மை என நம்பிய ராஜகுமாரன், தனக்கு சொந்தமான மினிவேனை விற்று அதில் கிடைத்த ரூ.2 லட்சம் மற்றும் 2 கோழிகளுடன் உறவினர் ஒருவரை துணைக்கு அழைத்துக்கொண்டு சென்னை வந்தார்.

வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி ஆஸ்பத்திரி அருகே அவர்களை வரவழைத்த போலி சாமியார், ரூ.2 லட்சம் மற்றும் 2 கோழிகளை வாங்கிக்கொண்டு, பூஜை பொருட்கள் வாங்கி வருவதாக கூறிவிட்டு இருவரையும் அங்கேயே நிற்கும்படி கூறிவிட்டு சென்றவர் திரும்பி வரவே இல்லை. பின்னர்தான் தான் ஏமாற்றப்பட்டது ராஜகுமாரனுக்கு தெரியவந்தது.

இதுபற்றி வண்ணாரப்பேட்டை போலீசில் ராஜகுமாரன் புகார் செய்தார். அதன்பேரில் வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி கமிஷனர் ஜூலியட் சீசர் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சாம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும், போலி சாமியாரின் செல்போன் எண்ணையும் வைத்து நடத்திய விசாரணையில் போலி சாமியார் திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் கிராமம் உல்லாச நகர் மகிழம்பூ தெருவைச் சேர்ந்த யுவராஜ் (45) என்பது தெரியவந்தது.

அங்கு சென்ற தனிப்படை போலீசார் அவருடைய மனைவி கலையரசி மற்றும் மகனை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் போலி சாமியார் யுவராஜின் கூட்டாளிகளான அரக்கோணம் தாலுகா சிருமண அல்லி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (34), சென்னை காசிமேடு ஜீவரத்தினம் நகரைச்சேர்ந்த பாப்பா (56), மதுரை மாவட்டம் சிந்தாமணி கம்மாக்கரை ரோட்டை சேர்ந்த அமர்நாத் (21), கொடுங்கையூர் தென்றல் நகரைச் சேர்ந்த ஜெயந்தி (29) ஆகிய 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில், போலி சாமியார் யுவராஜ் மற்றும் இவர்கள் கூட்டாக சேர்ந்து மதுரை, திருச்சி, கோவை, சென்னை மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் கும்பலாக சுற்றித்திரிவார்கள், பின்னர் தனியாக இருப்பவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்து ஒரு நபரின் கஷ்டத்தை தெரிந்துகொண்டு அவர்களை குறிவைத்து பில்லிசூனியம் எனக்கூறி ஏமாற்றி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

கைதான 4 பேரிடம் இருந்தும் ராஜகுமாரன் கொடுத்த ரூ.2 லட்சம் மற்றும் 2 கோழிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள போலி சாமியார் யுவராஜை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story