சென்னை, புறநகரில் குப்பை எரி உலைகள் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை, புறநகரில் குப்பை எரி உலைகள் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Oct 2020 5:25 AM GMT (Updated: 27 Oct 2020 5:25 AM GMT)

சென்னை, புறநகரில் குப்பை எரி உலைகள் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியில் மயிலாப்பூர், அம்பத்தூர், பள்ளிக்கரணை, கொடுங்கையூர், சாத்தாங்காடு, அயனாவரம் ஆகிய 6 இடங்களிலும், புறநகரில் தாம்பரத்தில் இரு இடங்கள், சிட்லப்பாக்கத்தில் ஓரிடம் என மொத்தம் 9 இடங்களில் குப்பை எரி உலைகளை அமைக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, அவற்றுக்கான ஒப்பந்தப்புள்ளிகளையும் கோரியிருக்கிறது. மனித நலனுக்கு எதிரான இத்திட்டம் கண்டிக்கத்தக்கது.

சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் அமைக்கப்பட உள்ள 9 எரிஉலைகளிலும் தலா 100 டன்கள் வீதம் தினமும் 900 டன் குப்பைகள் எரித்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படவிருக்கிறது. குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் என்ற புரட்சிகரமான தலைப்புடன் இத்திட்டம் முன்வைக்கப்படும் போதிலும், இத்திட்டத்தால் கிடைக்கும் பயன்கள் மிக மிக குறைவு ஆகும். அதே நேரத்தில் இதனால் ஏற்படும் பாதிப்புகள் அளவிட முடியாததாகும். 

பொருளாதார அடிப்படையிலும் இது தோல்வி திட்டமாகும். எந்த நன்மையும் செய்யாத, பல கேடுகளுக்கு வழிவகுக்கும் குப்பை எரி உலைகளை சென்னையில் அமைப்பது தற்கொலைக்கு சமமான முடிவு. எனவே, இந்த திட்டத்தை கைவிட வேண்டும். மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 உள்ளிட்ட குப்பை மேலாண்மைக்கான விதிகளை முழுமையாக பின்பற்றி குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story