திருத்தணியில் தடையை மீறி வேல்யாத்திரை சென்ற பாஜக தலைவர் எல்.முருகன் கைது


திருத்தணியில் தடையை மீறி வேல்யாத்திரை சென்ற பாஜக தலைவர் எல்.முருகன் கைது
x
தினத்தந்தி 6 Nov 2020 9:16 AM GMT (Updated: 6 Nov 2020 9:16 AM GMT)

திருத்தணியில் தடையை மீறி வேல்யாத்திரை சென்ற பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பா.ஜ.க. சார்பில் இன்று வெற்றிவேல் யாத்திரை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரை முருகபெருமானின் அறுபடை வீடுகள் உள்ள நகரங்கள் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பா.ஜ.க.வினர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

 இந்த நிலையில் பா.ஜ.க.வினரின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு சார்பில் பா.ஜ.க.வினரின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கவில்லை என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கையாக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக வேல் யாத்திரை தொடங்க உள்ள திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வேலுடன் திருத்தணிக்கு புறப்பட்டு சென்ற தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில் திருத்தணியில் தடையை மீறி தொடங்கிய பாஜகவின் வேல் யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினர். வேல் யாத்திரையை தொடங்கிய மாநில தலைவர் எல்.முருகனை போலீசார் கைது செய்தனர். அவருடன் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளை கைது செய்து பேருந்தில் போலீசார் அழைத்து சென்றனர்.

Next Story