தடங்கல், இடையூறுகள் வந்தாலும் வேல் யாத்திரையை தொடருவோம் - எல்.முருகன் பேட்டி


தடங்கல், இடையூறுகள் வந்தாலும் வேல் யாத்திரையை தொடருவோம் - எல்.முருகன் பேட்டி
x
தினத்தந்தி 12 Nov 2020 9:27 PM GMT (Updated: 12 Nov 2020 9:27 PM GMT)

தடங்கல்கள், இடையூறுகள் எதுவந்தாலும் வேல் யாத்திரையை தொடருவோம் என பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை,

பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க.வின் வெற்றிவேல் யாத்திரை கடந்த 6-ந்தேதி தொடங்கி, திட்டமிட்டபடி நடந்து வருகிறது. தீபாவளி பண்டிகை இடைவெளிக்கு பிறகு மீண்டும் 17-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதியுடன் திருச்செந்தூரில் இந்த யாத்திரை நிறைவுபெறுகிறது. நிறைவுநாள் நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொள்வார்.

எங்களுடைய திட்டப்படி, தடங்கல்கள், இடையூறுகள் எதுவந்தாலும் அதனை எதிர்கொண்டு யாத்திரையை தொடருவோம்.

கூட்டணி வேறு, கொள்கை வேறு. நாங்கள் எங்கள் கொள்கைகளையும், கட்சி பணிகளையும் எடுத்து சென்றுகொண்டிருக்கிறோம். அரசாங்கம்தான் வேல்யாத்திரைக்கு தடைபோட்டுள்ளது.

தி.மு.க., காங்கிரஸ் இந்த கொரோனா காலத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களை தடுக்கவில்லை, கைது செய்யவில்லை. முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் கூட்டத்தில் கூட பலர் கூடுகிறார்கள். இப்படியெல்லாம் இருக்கும்போது எங்களிடம் மட்டும் தமிழக அரசாங்கம் ஏன் பாரபட்சமாக நடந்துகொள்கிறது?.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story