பா.ஜ.க. தலைவர் முருகன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் - பா.ஜ.க. அலுவலகம் சூறையாடப்பட்டதால் பரபரப்பு
மதுரையில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே பா.ஜ.க அலுவலகம் சூறையாடப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை,
மதுரை திருப்பாலை பகுதியில் பா.ஜ.க. சார்பில் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தார். அவரை நிர்வாகிகள் மாட்டு வண்டியில் அழைத்து ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் மக்களுடன் மக்களாக நடைபெற்ற பொங்கல் விழாவில் அவர் கலந்து கொண்டு பொங்கல் வைத்தார். இதற்கிடையே திருப்பாலை பெரியார் நகர் பகுதியில் எல்.முருகன் வந்த போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிராண்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும் அவர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், பா.ஜ.க.வினர் அத்துமீறி பள்ளிவாசல் முன்பு ஒலிபெருக்கி கட்டியதாகவும், அதனை தட்டி கேட்டபோது பிரச்சினையில் ஈடுபட்டதாகவும் புகார் தெரிவித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே காலையில் இரு தரப்பினரும் கல், காலணிகளை வீசியும் மோதியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே மதுரை மேலமடை பகுதியில் உள்ள பா.ஜ.க. புறநகர் மாவட்ட அலுவலகத்திற்குள் நேற்று மாலை புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.
காலையில் நடந்த பிரச்சினையின் தொடர்ச்சியாக மாலையில் பா.ஜ.க. அலுவலகம் சூறையாடப்பட் டதா என்பது பற்றிய போலீஸ் விசாரணை நடக்கிறது. இதற்கிடையே, இந்த சம்பவத்தை கண்டித்து பா.ஜ.க.வினரும் மாலையில் அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story