வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர் - நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்


வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர் - நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்
x
தினத்தந்தி 13 Jan 2021 6:14 AM GMT (Updated: 13 Jan 2021 6:14 AM GMT)

நெல்லையில் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மணிமுத்தாறு, பாபநாசம் ஆகிய அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைகளில் இருந்து உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

எனவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. நெல்லை மேலப்பாளையத்தில் இருந்து டவுண் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றுப்பாலம் நீரில் மூழ்கியதால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றுக்கு 32,858 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொத்த 12 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்பால் இதுவரை உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

மழை வெள்ளதால் ஏற்பட்டுள்ள பயிர்சேதம் குறித்து வருவாய்த்துறை மற்றும் வேளாண்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்திற்காக 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நெல்லை விக்கிரமசிங்கபுரம் மற்றும் டவுண் பக்குதிகளில் இந்த மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story