அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது - மருத்துவர்கள் தகவல்


அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது - மருத்துவர்கள் தகவல்
x
தினத்தந்தி 21 Jan 2021 4:06 AM GMT (Updated: 21 Jan 2021 4:06 AM GMT)

அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கடந்த 5-ந் தேதி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

அதன்பின்னர், ஓரிரு நாட்கள் அங்கு சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பினார். பின்னர் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையையும் கொண்டாடினார்.

இந்த நிலையில் அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதையடுத்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், அதனைத் தொடர்ந்து மியாட் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததன் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கும் அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகவே இருந்தது.

இதனால் அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழுவினர் முடிவு செய்தனர். அதற்காக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரிக்கு அமைச்சர் காமராஜ் நேற்று முன்தினம் இரவு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று இரவு அவருடைய உடல்நிலை குறித்த எம்.ஜி.எம். ஆஸ்பத்திரி உதவி இயக்குனர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் கூறியதாவது:-

கடந்த 19-ந் தேதி இரவு அமைச்சர் ஆர்.காமராஜ் வென்டிலேட்டர் உதவியுடன் எங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவரை அனுமதித்து சி.டி. ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில், கொரோனாவால் நுரையீரல் செயல்பாடுகளில் மாற்றம் அதிகமாக இருக்கிறது. அவர் அனுமதிக்கப்பட்ட பிறகு, சிகிச்சை நடைமுறைகள் சரியான அளவில் நடைபெற்றன. அவருடைய உடல்நிலை இப்போது நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. நாடித்துடிப்பு போன்ற அனைத்து உறுப்பு செயல்பாடுகளும் நிலையாக உள்ளது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் நுரையீரல் பாதிப்பு மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். எக்மோ கருவி பொருத்த தேவையில்லை என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Next Story