மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு


மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 31 Jan 2021 12:55 PM GMT (Updated: 31 Jan 2021 12:55 PM GMT)

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்தவர்களின் விவரம் பின்வருமாறு:-

* விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், வடநெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த திரு. காண்டியப்பன் என்பவரின் மகன் திரு. சங்கர்
என்பவர் எதிர்பாராத விதமாக மின்கம்பியில் கை பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; 

* செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், மேடவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திரு. மணி என்பவரின் மகன் திரு. சாமிநாதன் என்பவர் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம்தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

* அரியலூர் மாவட்டம் மற்றும் வட்டம், அன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த திரு. பிரகாசம் என்பவரின் மகன் திரு. மணிகண்டன் என்பவர் மின்எர்த் கம்பியை தொட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்றசெய்தியையும்;

* மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. ராஜ் என்பவரின் மகன் திரு. சிலம்பரசன் என்பவர் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

* இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி அல்லி என்பவரின் கணவர் திரு. அழகர்சாமி என்பவர் எதிர்பாராத விதமாக மின் கம்பியை தொட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

* திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சோமரசம்பேட்டை, அதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. சுதாகர் என்பவரின் மகன் திரு.கிஷோர் என்பவர் மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

* இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், பள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. புஷ்பராஜ் என்பவரின் மகன் திரு. மனோகரன் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் செய்தியையும்;

* மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், நல்லபெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி ரஞ்சிதம் என்பவரின் கணவர் திரு. தேவசகாயம் என்பவர் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

* வாடிப்பட்டி வட்டம், மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்த திரு. பால்சாமி என்பவரின் மனைவி திருமதி பேச்சியம்மாள் என்பவர் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

* திருமங்கலம் வட்டம், அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. லட்சுமணன் என்பவரின் மகன் திரு. அக்கினிவீரன் என்பவர் இரும்பு கம்பியை கட்டும் பொழுது, எதிர்பாராத விதமாக உயர் அழுத்து மின்கம்பியில் பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

* மேலூர் வட்டம், சருகுவலையபட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி சாத்தம்மாள் என்பவரின் கணவர் திரு. செந்தில் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

* பேரையூர் வட்டம், தொட்டணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. பெருமாள் என்பவரின் மகன் திரு. முருகன் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

* கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், காட்டுவிளையைச் சேர்ந்த திரு. பொன்னுமணி என்பவரின் மகன் திரு. முருகராஜ் என்பவர் திருமண நிகழ்ச்சியின் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

* நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், கவுண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. பழனியப்பகவுண்டர் என்பவரின் மகன் திரு. காளியண்ணன் என்பவர் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

* கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், வீரட்டகரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. அருள்தாஸ் என்பவரின் மனைவி திருமதி அந்தோணியம்மாள் என்பவர் மின்கம்பத்தின் அருகிலிருந்த மின் கம்பியை தொட்டதில், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

* நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், காக்காவேரி கிராமத்தைச் சேர்ந்த திரு. சந்தோஷ்குமார் என்பவரின் மகன் செல்வன் கோகுலன் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

* ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், பெரியசேமூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. கதிர்வேல் என்பவரின் மகள் செல்வி மோனிஷா என்பவர் வீட்டின் அருகே பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த உயிரிழந்த 17 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 17 நபர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story