நடிகர் சூர்யாவுக்கு கொரோனா ஆஸ்பத்திரியில் அனுமதி


நடிகர் சூர்யாவுக்கு கொரோனா ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 7 Feb 2021 10:20 PM GMT (Updated: 7 Feb 2021 10:20 PM GMT)

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

சூர்யா நடித்த சூரரை போற்று படம் கடந்த மார்ச் மாதம் ஓ.டி.டி. தளத்தில் திரைக்கு வந்தது. தற்போது ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் குழந்தைகள் மும்பையில் பாட்டி வீட்டில் உள்ளனர்.

அவர்களை பார்ப்பதற்காக சில தினங்களுக்கு முன்பு மும்பை சென்றார். நேற்று முன்தினம் மும்பையில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பினார். அப்போது அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது.

பரிசோதனையில் சூர்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து சூர்யா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கி விட முடியாது. அதே நேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணை நிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்'' என்று கூறியுள்ளார்.

சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே நடிகர்கள் விஷால், பிருதிவிராஜ், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ராஜசேகர், நடிகை தமன்னா, இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று மீண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story