கிருபானந்தவாரியார் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு: எடப்பாடி பழனிசாமிக்கு குடும்பத்தினர் நன்றி
கிருபானந்தவாரியாரின் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, கிருபானந்தவாரியாரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
சென்னை,
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்திலும் சைவத்தையும், தமிழையும், தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி நூல்களையும் சுவைபட பொதுமக்களுக்கு சொற்பொழிவாற்றி, அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சமூக நல்லிணக்கத்தை வளர்த்த கிருபானந்தவாரியாரின் பிறந்த தினமான ஆகஸ்டு 25-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
முதல்-அமைச்சருக்கு நன்றி
இதைத்தொடர்ந்து, வேலூரில் தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமியை கிருபானந்த வாரியாரின் சகோதரர் மகன் புகழனார், மருமகள் ஏலவார் குழலி, சகோதரியின் பேரன் சி.பி.பாபு மற்றும் குடும்பத்தினர் நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி., ஏ.சி. சண்முகம், வேலூர் மாவட்ட வேளாண் விற்பனைக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.கே. அப்பு ஆகியோர் உடன் இருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story