குறைகளை அரசுக்கு மக்கள் தெரிவித்து உடனடியாக தீர்வுகாண ‘1100 எண் தொலைபேசி’ சேவை திட்டம்


குறைகளை அரசுக்கு மக்கள் தெரிவித்து உடனடியாக தீர்வுகாண ‘1100 எண் தொலைபேசி’ சேவை திட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2021 3:45 AM GMT (Updated: 14 Feb 2021 3:35 AM GMT)

மக்கள் தங்களின் குறைகளை அரசுக்கு தெரிவித்து உடனடியாக தீர்வுகாண வசதியாக 1100 எண் தொலைபேசி சேவை என்ற திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை, 

தமிழக சட்டசபையில் விதி 110-ன் கீழ் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி முதல்-அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், தற்போது வெவ்வேறு அரசுத் துறைகள் தங்களுக்கென, தனித்தனியே துறைவாரியான மக்கள் குறைதீர்ப்பு மையங்கள் மற்றும் இணையதளங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன.

மாவட்ட அளவில் திங்கட்கிழமைதோறும் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள், மாதாந்திர மனுநீதி நாள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள், அம்மா திட்ட குறைதீர்க்கும் நாள், ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் போன்றவையும், மாநில அளவில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, அம்மா அழைப்பு மையம் போன்ற அமைப்புகளிலும் மனுக்கள் பெறப்பட்டு, தீர்வுகள் காணப்படுகின்றன.

இதனால், ஒரே நபர் பல்வேறு இடங்களில் மனுக்களை அளிக்கும் சூழல் ஏற்படுகிறது. ஒரே கோரிக்கை மனு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்படுவதையும் காண முடிகிறது. எனவே தமிழ்நாடு அரசுத்துறைகளின் கீழ் செயல்படும் எல்லா குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, குறைகள் விரைந்து களையப்படுவதை கண்காணிக்க ஒரு சிறப்பான அமைப்பு முறை தேவைப்படுகிறது.

எனவே, பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் பதிவு செய்து, அவற்றிற்கு தீர்வு காண, ஒரு குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் அமைப்பதன் அவசியத்தை உணர்ந்து, “முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம்” செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

உதவி அழைப்பு மையம்

அந்த அறிவிப்பின்படி, தகவல் தொழில்நுட்பவியல் துறையின் மூலம் ரூ.69.21 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மூலம் தெரிவிக்கும் வகையில், சென்னை, சோழிங்கநல்லூர், ராஜீவ் காந்தி சாலையில் 100 இருக்கைகளுடன் முதல்-அமைச்சரின் உதவி அழைப்பு மையம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த முதல்-அமைச்சரின் உதவி அழைப்பு மையத்தை, தலைமைச்செயலகத்தில் 13-ந் தேதி (நேற்று) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 வாயிலாக தெரிவிக்கலாம்.

இணையதளம் மூலமாகவும்....

மேலும், பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு 24 மணி நேரமும் CMHelpline.tnega.org என்ற இணையதளம் மூலமாகவும், cmhelpline@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும், CMHelpline Citizen என்ற செல்போன் செயலி மூலமாகவும், https://twitter.com/cmhelpline-tn என்ற டுவிட்டர் மூலமாகவும், https://www.facebook.com/CM-Hepline-TN என்ற பேஸ்புக் மூலமாகவும் பதிவு செய்யலாம்.

இத்திட்டத்தின் மூலமாக பல்வேறு அரசுத்துறைகளுக்கான குறைகளை மனுதாரர் ஒரே தளத்தில் பதிவு செய்யலாம். இதன்மூலம் பொதுமக்களிடம் இருந்து தொலைபேசி, குறைதீர்க்கும் முகாம், இணையதளம், சமூக ஊடகங்கள், செல்போன் செயலி, மின்னஞ்சல் மூலமாக பெறப்படும் மனுக்கள் மீது இத்திட்டத்தின் மூலமாக குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

உடனடியாக தீர்வு

இத்திட்டத்தில் பொதுமக்களின் குறைகளை உடனடியாக களைந்திட அவர்களின் ஆதார் எண் அல்லது ரேஷன் அட்டை எண்ணை அவசியம் தெரிவிக்க வேண்டும். வேலைவாய்ப்பு கோரும் மனுதாரர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு உரிய வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்படும்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏற்பு, நிராகரிப்பு, மனுவின் தற்போதைய நிலை குறித்து குறுஞ்செய்தி வாயிலாக மனுதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களால் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story