தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும்; மு.க.ஸ்டாலின் பங்கேற்ற விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம்


தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும்; மு.க.ஸ்டாலின் பங்கேற்ற விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 21 Feb 2021 10:11 PM GMT (Updated: 21 Feb 2021 10:11 PM GMT)

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பங்கேற்ற விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பங்கேற்ற விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விவசாயிகள் மாநாடு
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேற்கு மண்டல விவசாயிகள் மாநாடு நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
புதுடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் நினைவாக அவர்களுக்கு தீப சுடர் ஏற்றி அஞ்சலி மற்றும் வீர வணக்கத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செலுத்தினார்.
அவருக்கு விவசாயிகள் தரப்பில் சிறுதானியத்தால் செய்த இனிப்புகள், இயற்கை முறையில் விளைவித்த மஞ்சள், சென்னிமலை பெட்சீட், பவானி ஜமுக்காளம் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாநாட்டு தலைவர் காசியண்ணன் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
தீர்மானம்
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பயிர்க்கடன் பெற்று திருப்பி கட்ட முடியாமல் மத்திய கால கடன்களாக மாற்றப்பட்டு உள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் 2020-ம் ஆண்டு டிசம்பர், 2021 ஜனவரி ஆகிய காலங்களில் கடன் கட்டி, கடன் திரும்ப பெற முடியாத விவசாயிகளுக்கு முறையாக கட்டிய கடன் தொகை திரும்ப வழங்கப்பட வேண்டும்.
* இலவச விவசாய மின் வழங்கல் திட்டம் பேராபத்துக்கு உள்ளாகி உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இலவச மின்சார திட்டத்தை பாதுகாக்க சட்ட பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.
* இனிமேல் அமைக்கப்படும் அனைத்து உயர்மின் கோபுர திட்டங்களும் சாலை ஓரமாக புதைவடம் மூலமாக அமைக்கப்பட வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்தி தந்தி சட்டம் 1885-ஐ ரத்து செய்ய வேண்டும்.
8 வழிச்சாலை
* கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை மீண்டும் தொடங்க வேலைகள் நடக்கின்றன. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
* திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக போடப்பட உள்ள ஐ.டி.பி.எல். திட்டத்தை சாலை ஓரமாக செயல்படுத்த வேண்டும்.
* ஆனைமலை-நல்லாறு, பாண்டியாறு- புன்னம்புழா, காவிரி-திருமணிமுத்தாறு, காவிரி உபரி நீரை மேட்டூர் வலதுகரையில் இருந்து அந்தியூர், பவானி தாலுகா பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
* காங்கேயம், தாராபுரம் தாலுகாக்களில் உள்ள நிலங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் உப்பாறு அணை, வட்டமலைக்கலை அணைகளுக்கு அமராவதி ஆற்றின் உபரி தண்ணீரை நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
* சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
* கோவை, சூலூர் தாலுகா வாரப்பட்டியில் அமைய உள்ள சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
* வேளாண் விரோத சட்டங்களை செயல்படுத்தாமல் இருக்க மாற்று சட்டத்தை பஞ்சாப் அரசு இயற்றியதை போன்று தமிழகத்திலும் மாற்று சட்டம் இயற்ற வேண்டும்.
100 நாள் வேலை வாய்ப்பு
* 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அனைத்து விவசாய பணிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும்.
மேற்கண்டவை உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 32 கோரிக்கைகளும் விவசாயிகள் சார்பில் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டன. 18 விவசாய சங்கத்தினர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மேற்கு மண்டல விவசாயிகள் முழுமையாக தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உறுதி அளித்தனர்.

Next Story