350 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இருப்பு


350 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இருப்பு
x
தினத்தந்தி 22 Feb 2021 10:55 PM GMT (Updated: 22 Feb 2021 10:55 PM GMT)

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 350 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனை மின்னணு ஏலம் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விற்பனைக்கூட செயலர் கணேசன் தெரிவித்துள்ளார்.

காரைக்கால், பிப்.23-
காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 350 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனை மின்னணு ஏலம் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விற்பனைக்கூட செயலர் கணேசன் தெரிவித்துள்ளார்.
அறுவடை பணி 
காரைக்கால் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த மாதம் பெய்த பெய்த கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் ஒருசில பகுதிகளில் அறுவடை பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆனால் நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கு புதுச்சேரி அரசு இதுவரை முன்வரவில்லை. இதனால் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு தனிநபர்கள் நெல்லை வாங்கி வருகின்றனர். எனவே பல்வேறு விவசாயிகள் நெல்லை விற்காமல் காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள கிடங்குகளில் சேமித்து வருகின்றனர்.
350 மெட்ரிக் டன் இருப்பு
இதுதொடர்பாக  காரைக்கால் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலர் கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை பெற்று சேமித்து வருகிறோம். தற்போது நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. அதனால், ஏராளமான விவசாயிகள் நெல் மூட்டைகளை இங்குள்ள 8 கிடங்குகளில் சேமித்து வைக்கின்றனர். இதுவரை 350 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 
கடந்த ஆண்டு காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாத்து விலை ஏறிய பிறகு விற்பனை செய்து கொடுத்தோம். இந்த ஆண்டு கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் நெல் மூட்டைகள் வரும் என எதிர்பார்க்கிறோம். விரைவில் மின்னணு ஏலம் மூலம் இந்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும். இங்கு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளில் பூச்சிகள் தாக்காத வகையில் மருந்து அடித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதனால் விவசாயிகள் தாராளமாக இங்கு நெல் மூட்டைகளை இருப்பு வைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story