தூத்துக்குடி மாவட்டத்தில் ராகுல்காந்தி நாளை பிரசாரம்


தூத்துக்குடி மாவட்டத்தில் ராகுல்காந்தி நாளை பிரசாரம்
x
தினத்தந்தி 26 Feb 2021 2:54 AM GMT (Updated: 26 Feb 2021 2:54 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் ராகுல்காந்தி நாளை (சனிக்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தூத்துக்குடி,

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி அவர், தமிழகத்தில் 2-வது கட்டமாக நாளை (சனிக்கிழமை) பிரசாரத்தை தொடங்குகிறார்.

இதையொட்டி அவர் நாளை காலை 11 மணி அளவில் தனி விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 11.30 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வக்கீல்களுடன் கலந்துரையாடுகிறார். மதியம் 1 மணி அளவில் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

அதன்பிறகு தூத்துக்குடி பீச் ரோடு வழியாக முத்தையாபுரத்தை அடுத்த கோவங்காடு விலக்கு பகுதிக்கு செல்லும் ராகுல்காந்தி, அங்கு உப்பள தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் அங்கிருந்து முக்காணி, ஆத்தூர், சாகுபுரம், குரும்பூர் வழியாக ஆழ்வார்திருநகரிக்கு வருகிறார். அங்கு காமராஜர் சிலை அருகே பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார்.

பின்னர் நாசரேத் வழியாக சாத்தான்குளத்துக்கு செல்கிறார். அங்கு காமராஜர் சிலை அருகே பொதுமக்களிடையே பேசுகிறார். அதன்பிறகு நாங்குநேரி தொகுதிக்கு சென்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு, அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ள அனைத்து பகுதிகளிலும் கட்சிக்கொடிகள், அலங்கார வளைவுகள், தோரணங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதேபோன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

Next Story