அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் - உடன்பாடு கையெழுத்து ஆனது


அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் - உடன்பாடு கையெழுத்து ஆனது
x
தினத்தந்தி 28 Feb 2021 4:16 AM GMT (Updated: 28 Feb 2021 4:16 AM GMT)

சென்னையில் நேற்று அ.தி.மு.க-பா.ம.க. இடையே தேர்தல் கூட்டணி உடன்பாடு கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் காண்பித்த காட்சி. அருகில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் வெளியிட்ட நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் முழு வீச்சில் இறங்கி இருக்கின்றன.

கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு போன்றவற்றில் தலைவர்கள் தீவிரம் காட்ட தொடங்கி இருக்கின்றனர்.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டது. அதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. அங்கம் வகித்தது. சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெறும் என்று கூறப்பட்டது.

அதற்கான முயற்சியில் மூத்த அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டதோடு, திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை நேரடியாக சந்தித்து பல கட்டங்களாக பேசிவந்தனர். ஆனால் பா.ம.க. தரப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே கூட்டணியை உறுதி செய்ய முடியும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த கோரிக்கைக்கு அ.தி.மு.க. அரசு மவுனம் சாதித்து வந்த நிலையில், பா.ம.க. 20 சதவீதம் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு என்ற கோரிக்கையில் இருந்து, உள் ஒதுக்கீடு என்ற கோரிக்கையை தளர்த்திக்கொண்டனர். அதற்கு அ.தி.மு.க. அரசு பச்சைக்கொடி காட்டியது.

அதற்கேற்றாற்போல், சட்டசபையில் வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி அரசு தீர்மானமாக கொண்டுவந்து மசோதவாக நிறைவேற்றப்பட்டது. பா.ம.க. சார்பில் இளைஞர் அணி தலைவரும், எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தார். பின்னர் நிருபர்களைச் சந்தித்த பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருப்பதை உறுதி செய்தார்.

இதையடுத்து, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. அங்கம் வகிப்பதை அச்சாரமிடும் வகையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. அ.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்பட மூத்த அமைச்சர்கள், பா.ம.க. சார்பில் தலைவர் ஜி.கே.மணி, இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சமூகநீதி பேரவை தலைவர் வக்கீல் பாலு, புதுச்சேரி அமைப்பாளர் தன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதில் 23 இடங்கள் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டன. அதற்கான உடன்படிக்கை ஒப்பந்தத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கேமணி ஆகியோர் கையொப்பமிடப்பட்டு இருந்தது. அந்த உடன்படிக்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

நடைபெற உள்ள 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டில் தேர்தலை சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வுக்கும், பா.ம.க.வுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு தமிழ்நாட்டில் 23 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், ‘தொகுதி எண்ணிக்கை தான் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 2 தரப்பிலும் நிர்வாகிகள் அமர்ந்து பேசி, எந்தெந்த மாவட்டத்தில்?, எந்தெந்த தொகுதிகள்? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறுகின்றன என்ற முடிவு தெரிந்த உடன் அறிவிப்போம்' என்றார்.

Next Story