அரசு குடியிருப்பை உடனடியாக காலி செய்ய இயலாது; முன்னாள் துணைவேந்தர் சூரப்பா


அரசு குடியிருப்பை உடனடியாக காலி செய்ய இயலாது; முன்னாள் துணைவேந்தர் சூரப்பா
x
தினத்தந்தி 15 April 2021 1:43 PM GMT (Updated: 15 April 2021 1:43 PM GMT)

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா அரசு குடியிருப்பில் இருந்து உடனடியாக காலி செய்ய இயலாது என தெரிவித்துள்ளார்.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்பட்டார்.  அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வி சிறப்பு நிறுவனம் என்ற சிறப்பு அந்தஸ்தை பெறுவதில், மாநில அரசுக்கும், இவருக்கும் இடையே பல்வேறு மோதல்கள் எழுந்தன.

அதனை தொடர்ந்து அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பை எதிர்த்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு கடிதம் எழுதியது என பல்வேறு விஷயங்களில் சூரப்பா பெரிதும் பேசப்பட்டார்.

அவர் மீது தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் அவர் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார் என்ற நற்பெயரும் அவருக்கு இன்றளவும் இருக்கிறது.

இதற்கிடையில் அவர் மீது ஊழல் புகார் எழுந்ததையடுத்து, அதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை நடத்தி வருகிறார்.  விசாரணை இன்னும் நிறைவு பெறவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் 3 ஆண்டு பதவிக்காலம் கடந்த 11ந்தேதியுடன் முடிவடைந்தது.

அவருடைய பதவிக்காலம் முடிந்து இருந்தாலும், அவர் மீதான ஊழல் புகார் குறித்த விசாரணை தொடரும் என்று விசாரணையை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். இன்னும் 10 முதல் 15 நாட்களுக்குள் விசாரணையை முடித்து, அடுத்தகட்ட அறிக்கையை அரசுக்கும் அவர் சமர்ப்பிக்க இருக்கிறார்.

சூரப்பாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவர் ஏற்கனவே கவர்னரிடம் துணைவேந்தர் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியும் உள்ளார்.  இது ஒருபுறம் இருக்க பல்கலைக்கழக வளாக துணைவேந்தருக்கான குடியிருப்பில் இருந்து அவர் காலி செய்ய வேண்டும் என உயர்கல்வித் துறை அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஆனால் தன்னால் உடனடியாக காலி செய்ய இயலாது என்றும், மனைவிக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டிருப்பதால் 2 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளரிடம் சூரப்பா கடிதம் அளித்துள்ளார். இதற்காக அரசு விதிக்க கூடிய வாடகை தொகையை தருவதாகவும் சூரப்பா தெரிவித்துள்ளார்.

Next Story