வேகமான பாய்ச்சலில் கொரோனா: பாதிப்பு, உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு


வேகமான பாய்ச்சலில் கொரோனா: பாதிப்பு, உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு
x

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

சென்னை, 

தமிழகத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா பாய்ச்சல் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 9 ஆயிரத்து 344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்றைய (சனிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 99 ஆயிரத்து 50 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 5,679 ஆண்கள், 3,665 பெண்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 344 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 30 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 319 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,367 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 2,884 பேரும், செங்கல்பட்டில் 807 பேரும், கோவையில் 652 பேரும், குறைந்தபட்சமாக கள்ளக்குறிச்சியில் 32 பேரும், பெரம்பலூரில் 11 பேரும் பாதிப் புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை2 கோடியே 7 லட்சத்து 39 ஆயிரத்து 160 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 9 லட்சத்து 80 ஆயிரத்து 728 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 92 ஆயிரத்து 42 ஆண்களும், 3 லட்சத்து 88 ஆயிரத்து 650 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 36 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 35 ஆயிரத்து 537 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 36 ஆயிரத்து 689 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 17 பேரும், தனியார் மருத்துவமனையில் 22 பேரும் என 39 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 22 பேரும், திருச்சி, செங்கல்பட்டில் தலா 3 பேரும், கன்னியாகுமரி, மதுரை, சேலத்தில் தலா 2 பேரும், வேலூர், தஞ்சாவூர், காஞ்சீபுரம், கடலூரில் தலா ஒருவரும் என 11 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரத்து 71 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5,263 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 2,884 பேரும், கோவையில் 615 பேரும், செங்கல்பட்டில் 391 பேரும் அடங்குவர். இதுவரையில் 9 லட்சத்து 2 ஆயிரத்து 222 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 65 ஆயிரத்து 635 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story