நெல்லை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை
நெல்லை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
நெல்லை,
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்துவந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துவருகிறது.
அதன் தொடர்ச்சியாக, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 21-ந் தேதி (புதன்கிழமை) வரை மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி வெயில் வாட்டி வதைத்துவந்த நிலையில் இன்று பலத்த காற்றுடன் பாளையங்கோட்டை, மேலப்பாளையம், நெல்லை சந்திப்பு, உள்ளிட்ட மாநகர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் பாளையங்கோட்டை குலவணிகர் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த பனை மரம் முறிந்து விழுந்து கார் சேதம் அடைந்துள்ளது. மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மின் உயர்கள் பல்வேறு இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வெயில் வாட்டி வதைத்துவந்த நிலையில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்தது அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியுள்ளது.
Related Tags :
Next Story