சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையான வெற்றி: மு.க.ஸ்டாலினுக்கு ஆர்.ஆர்.கோபால்ஜி வாழ்த்து


சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையான வெற்றி: மு.க.ஸ்டாலினுக்கு ஆர்.ஆர்.கோபால்ஜி வாழ்த்து
x
தினத்தந்தி 3 May 2021 7:23 PM GMT (Updated: 3 May 2021 7:23 PM GMT)

சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையான வெற்றியை பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு, ஆர்.ஆர்.கோபால்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை, 

சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து, கிராமக்கோவில் பூசாரிகள் பேரவை நிறுவனர் எஸ்.வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

10 ஆண்டுகளுக்கு பிறகு உதிக்கும் சூரியன் ஒளிவீச்சையும், அதன் வேகத்தையும் தி.மு.க.வுக்கு கிடைத்துள்ள தனிப்பெரும்பான்மையே சான்று. முதல்-அமைச்சர் பொறுப்பு ஏற்கும் மு.க.ஸ்டாலினை மனமார வாழ்த்துகிறோம். தந்தை வகுத்த வழியில் தனயன் இன்று நிகழ்த்தியுள்ள சாதனைகளை கருணாநிதி அருவமாக வாழ்த்துகின்றார் என்பது வெளிப்படை. முன்னோர் ஆசியின்றி முன்னேற்றம் இல்லை. இன்று எட்டியுள்ள இந்த உயரம் உமது உழைப்பால் மட்டுமே என்பதை இன்றைய தமிழகம் நேரில் கண்டது.

நாங்களும் புதிய நம்பிக்கை கொண்டு, மீண்டும் தங்களை வாழ்த்துகிறோம். நீங்கள் வகுத்த தி.மு.க. தேர்தல் அறிக்கை பிற காலங்களில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளில் இருந்து மாறுபட்டது என்பதை, முக்கியமான மலைக்கோவில்கள் அனைத்திலும் கேபிள் கார் வசதி ஏற்படுத்தப்படும், கிராமப்புற பூசாரிகளின் ஊதியமும், ஓய்வூதியமும் அதிகரிக்கப்படும், இந்து ஆலயங்கள் புனரமைப்பு, குடமுழுக்கு பணிக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும், புகழ்பெற்ற கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல ஒரு லட்சம் பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளால் இந்துக்கள் அனைவரும் உணர்ந்தார்கள். உங்களுடைய வெற்றிக்கு துணை சேர்ந்தார்கள்.

கோவில் நிலங்களை மீட்கவேண்டும்

வாக்குறுதிகள் அனைத்தையும் செய்வீர்கள். உறுதிபட செய்வீர்கள். சொன்னதை செய்வோம். செய்வதை சொல்வோம் என்பதுதான் தி.மு.க.வின் அரசியல் நெறி என்பதை அறிவோம். இவற்றுடன் தமிழகத்தின் இந்துக்கள் அனைவருக்கும் உள்ள தீராவேட்கை என்னவென்றால், தமிழக கோவில் நிலங்களை மீட்டு அதே கோவில்களுக்கு சொந்தமாக்கி, அதன் வருவாய் மூலம் அந்த கோவில்கள் திறம்பட செயல்பட வழிவகுக்க வேண்டும் என்பதுதான். இந்து கோவில்களின் வருவாயை ஆன்மிகம் தவிர்த்து பிற பணிகளுக்கு செலவிடக்கூடாது.

தங்கள் செம்மையான ஆட்சியில் தமிழகம் பல நலன்களை பெற்று ஓங்கும் என்பது திண்ணம். மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற்றிட கிராம பூசாரிகள் அனைவரும் அவரவர் கோவில்களில் எம்கோவுக்காக, எமது அரசனுக்காக சிறப்பு அர்ச்சனை செய்கிறோம். துர்கா ஸ்டாலினின் ஆன்ம பலமும், பிரார்த்தனையும் தமிழகம் அறியும். அவருக்கு வாழ்த்துகள். கிராம பூசாரிகள் பேரவை மாநாட்டில் கருணாநிதி பங்குகொண்டு, எங்கள் உணர்வுகளுடன் ஒன்றிணைந்ததுபோன்றே, நீங்கள் எங்கள் பேரவை மாநாட்டில் பங்கேற்கவேண்டும் என்பது எங்கள் விருப்பம். உங்களுடைய எல்லா முயற்சிகளிலும் தெய்வம் துணை நிற்கும். நாங்களும் உடன் நிற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story