பெரியநாயக்கன்பாளையம் அருகே வாலிபரை கத்தியால் குத்திய 3 பேர் கைது
பெரியநாயக்கன்பாளையம் அருகே வாலிபரை கத்தியால் குத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இடிகரை
கோவை சாய்பாபா காலனி ஜீவா வீதியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 24). கூலி தொழிலாளி. இவர் தனது மனைவியுடன் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கோட்டைப்பிரிவு பகுதியில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று மதன்குமாரை அவருடைய நண்பர் மத்தம்பாளையத்தை சேர்ந்த சூர்யா (19) என்பவர் மதுகுடிக்க வருமாறு, தண்ணீர் பந்தல் பகுதிக்கு அழைத்து சென்றார்.
பின்னர் அங்கிருந்து 2 பேருடன் மதன்குமாரை சூர்யா மோட்டார் சைக்கிளில் பெட்டதாபுரம் அருகே அழைத்து சென்றார். அப்போது ஆட்கள் நடமடாட்டம் இல்லாத பகுதியில் சூர்யாவுடன் வந்த 2 பேர் மதன்குமாரை மிரட்டியதுடன் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் காயடைந்த மதன்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மத்தம்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த மதன்குமார் நண்பர் சூர்யா, கண்ணப்ப நகரை சேர்ந்த சஞ்சீவி (21), பெட்டதாபுரத்தை சேர்ந்த சிவா (23) ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story