தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு கூடுதலாக 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் தேவை - மத்திய அமைச்சரிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்


தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு கூடுதலாக 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் தேவை - மத்திய அமைச்சரிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 May 2021 7:44 AM GMT (Updated: 10 May 2021 7:44 AM GMT)

தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு கூடுதலாக 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் தேவை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

"தமிழ்நாட்டில் தற்போது 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான ரெம்டெசிவிர் மருந்தைத் தேவையான அளவுக்குக் கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 

தற்போது அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும், ஆறு பெருநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கும் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகின்றது. அனைத்து மாநிலங்களுக்கும் இந்த மருந்துக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி, தமிழ்நாட்டுக்கு இதுவரை 2 லட்சத்து 5 ஆயிரம் குப்பிகள், அதாவது நாளொன்றுக்கு 7,000 குப்பிகள் என்ற குறைந்த அளவிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தேவைக்கு இது போதுமானதாக இல்லை என்பதால், இந்த ஒதுக்கீட்டை உடனடியாக உயர்த்தித் தர வேண்டுமென மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் தொலைபேசி வாயிலாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

நாளொன்றுக்கு தமிழகத்திற்குக் குறைந்தபட்சம் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்தை ஒதுக்கீடு செய்யுமாறும், அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்ய முடியுமென்றும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார். மத்திய அமைச்சரும், இந்தக் கோரிக்கை குறித்து பரிசீலித்து ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளார்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story