பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை எடுங்கள் மு.க.ஸ்டாலினுக்கு, கமல்ஹாசன் கடிதம்


பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை எடுங்கள் மு.க.ஸ்டாலினுக்கு, கமல்ஹாசன் கடிதம்
x
தினத்தந்தி 12 May 2021 7:16 PM GMT (Updated: 12 May 2021 7:16 PM GMT)

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை எடுங்கள் என மு.க.ஸ்டாலினுக்கு, கமல்ஹாசன் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை, 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. கடந்த 66 நாட்களாக உயராமல் இருந்த விலை தேர்தல் முடிந்ததும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

கொரோனா சூழலில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துவருவது வேதனையளிக்கிறது. டாஸ்மாக் மது விற்பனையை வருவாய் வாய்ப்பாகக் கருதுவதைப் போல எரிபொருள் நிரப்பும் நிலையங்களையும் வருமானத்தைப் பெருக்கும் வழிகளாக மத்திய, மாநில அரசுகள் கருதுகின்றனவோ எனும் அச்சம் ஏற்படுகிறது.

மத்திய அரசிற்கு எரிபொருட்களின் விலையைக் குறைக்கும் எண்ணம் இருப்பது போலவே தெரியவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டிருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தங்களை (மு.க.ஸ்டாலின்) கேட்டுக்கொள்கிறேன். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின் விலையைக் குறைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story