தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா...? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்


தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா...?  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
x
தினத்தந்தி 26 May 2021 5:47 AM GMT (Updated: 26 May 2021 6:02 AM GMT)

தடுப்பூசிக்கு மத்திய அரசை மட்டும் சார்ந்திருக்காமல் உலகளாவிய டெண்டர் கோரியுள்ளோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை

நேமத்தில் உள்ள  புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி மையதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா பாதித்தாலும் பெரிய பிரச்சினை இருக்காது. உலகளாவிய டெண்டர் கோரப்பட்டு தடுப்பூசி வாங்க உள்ளோம். இன்னும் சில மாதங்களில் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி வாங்கப்படும். கொரோனா தடுப்பூசி போடுவதை மக்கள் இயக்கமாக மாற்ற திட்டமிட்டு உள்ளோம். தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிக்க பரிசீலனை செய்யப்படும்.

சென்னையில் கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. அடுத்த இரண்டு மூன்று நாட்களில் முழு ஊரடங்கின் பலன் மேலும் தெரிய ஆரம்பிக்கும்.கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு

தேவையின்றி மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். ஆக்சிஜன் தட்டுப்பாடு கடந்த காலங்களில் இருந்தது உண்மை, தற்போது சரி செய்யப்பட்டுவிட்டது. தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளோம். 

தமிழகத்தில் கடந்த் 24 மணி நேரத்தில் 2. 84 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கைகளும் தற்போது போதுமான அளவில் உள்ளன. 

கடந்த வாரத்தில் தடுப்பூசி வீணக்கப்படுவது ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. அனைவரும் கொரோனா தடுப்பூசி போட முன் வரவேண்டும். கொரோனா குறித்த விழிப்புணர்வு முழு அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொரோனா தடுப்பூசி போடுவது ஒரு நாளைய சராசரி 78 ஆயிரமாக உயர்ந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொரோனா தடுப்பூசி வீணாவதும் குறைந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நாளொன்றுக்கு 1.64 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 

தமிழகத்தில் தற்போது 3.14 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இருப்பு உள்ளன. தடுப்பூசிக்கு மத்திய அரசை மட்டும் சார்ந்திருக்காமல் உலகளாவிய டெண்டர் கோரியுள்ளோம். 

செங்கல்பட்டில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. பிரச்சினைகளை சரி செய்து செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் கொரோனா பரவலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பிறகு திமுக தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என கூறினார்.

Next Story