பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரம்: மேலும் 3 மாணவிகள் முறைப்படி புகார்


பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரம்:  மேலும் 3 மாணவிகள் முறைப்படி புகார்
x
தினத்தந்தி 30 May 2021 8:22 AM GMT (Updated: 30 May 2021 8:22 AM GMT)

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், மேலும் 3 மாணவிகள் ராஜகோபாலன் மீது முறைப்படி புகார் அளித்துள்ளனர்.

சென்னை,

கொரோனா சூழல் காரணமாக பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில் ஆன்லைன் வழியான கல்வி கற்பித்தலில் மாணவிகளிடம், பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சென்னை பத்ம சேஷாத்திரி பாலபவன் சி.பி.எஸ்.இ. பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் (வயது 59) சிக்கினார்.

அவர், அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது, மாணவிகளின் ‘வாட்ஸ்-அப்’ எண்ணிற்கு ஆபாச தகவல்களை அனுப்புவது, செல்போனில் அநாகரிகமான முறையில் இரட்டை அர்த்தத்தில் பேசுவது என்று தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்துள்ளார். இவரது தவறான நடத்தை, செயல்பாடுகள் குறித்து ஆதாரங்களுடன் சமூக வலைத்தளத்தில் தகவல்கள் வெளியாகின.

இதனை தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் ஆசிரியர் ராஜகோபாலனை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. ஆசிரியர் ராஜகோபால் சென்னை நங்கநல்லூர் இந்து காலனி 7வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவரை விசாரணைக்காக போலீசார் அழைத்து வந்தனர்.

அப்போது அவரது செல்போன், லேப்-டாப்பை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் அதில் அவர், மாணவிகளுக்கு அனுப்பிய ஆபாச தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு இருந்தது. ‘சைபர் கிரைம்’ போலீசார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அழிக்கப்பட்ட தகவலை மீட்டனர்.

இந்தநிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் ஆசிரியர் ராஜகோபாலிடம் தொடர் விசாரணை நடத்தினர். இதில் அவர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டப்பிரிவு, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் (354 (ஏ)), சைகை மூலம் பெண்ணின் அடக்கத்தை அவமதித்தல் (509), தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் சென்னை அசோக்நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

ஆசிரியர் ராஜகோபாலனை வருகிற ஜூன் 8ந்தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி முகமது பரூக் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபால் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொரோனா பரிசோதனை முடிவுக்கு பின்னர் அவர், புழல் சிறைக்கு மாற்றப்படுவார்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், மேலும் 3 மாணவிகள் ராஜகோபாலன் மீது முறைப்படி புகார் அளித்துள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன், இரண்டு மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். தற்போது மேலும் 3 மாணவிகள் ராஜகோபாலன் மீது புகார் முறைப்படி புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து தற்போது விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது.

இதுவரை மொத்தமாக ராஜகோபலனால் பாதிக்கப்பட்ட 5 மாணவிகள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது குவியும், அடுத்தடுத்த பாலியல் புகார்கள் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


Next Story