தி.மு.க. நிர்வாகிகள், குடும்பத்தினருக்கு முன்னுரிமை? ‘தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை தடுக்க வேண்டும்’ மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்


தி.மு.க. நிர்வாகிகள், குடும்பத்தினருக்கு முன்னுரிமை? ‘தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை தடுக்க வேண்டும்’ மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 31 May 2021 1:34 AM GMT (Updated: 31 May 2021 1:34 AM GMT)

‘தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை தடுக்கவேண்டும்’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கட்சியும், அரசும் தனித்தனியாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மோதுதல் இருக்கக்கூடாது. இணைந்தும் போய்விடக்கூடாது. தனித்தன்மையுடன் தனித்தனியாக இருக்க வேண்டும் என்றார் அண்ணா. அண்ணாவின் பொன்மொழிக்கு முற்றிலும் முரணான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது வருத்தத்துக்குரியது.

முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க, 18 வயது முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி முகாமில், தடுப்பூசியின் இருப்பை கணக்கில் கொண்டு, கொரோனா பாதிப்புக்கு ஆளாகக்கூடிய தொழிலாளர்களான செய்தித்தாள் போடுபவர்கள், பால் விற்பனையாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், டாக்சி டிரைவர்கள், மின்வாரியப் பணியாளர்கள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளித்து கடந்த 22-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட லக்காபுரத்தில் கடந்த 27-ந்தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடப்பதாக முன்களப் பணியாளர்களுக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் தடுப்பூசி முகாமிற்கு சென்றதாகவும் ஆனால் உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறுப்படுகிறது.

அதேநேரம் பக்கவாட்டு வழியாக தி.மு.க. பிரமுகர்களின் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட சிலர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டதாகவும், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், முகாமிற்கு வெளியே நின்றிருந்த முன்களப்பணியாளர்கள் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டதன் காரணமாக அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. முன்களப்பணியாளர்களை அலைக்கழிப்பதுடன், கொரோனா பரவல் அதிகரிக்கவும் வழிவகுக்கிறது.

மேலும் முதல்-அமைச்சரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு தி.மு.க.வினரின் இதுபோன்ற செயல் குந்தகம் விளைவிப்பது போல் உள்ளது.

எனவே 22-ந்தேதி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை ஆணையின்படி, தடுப்பூசியின் இருப்பிற்கு ஏற்ப ஒவ்வொரு பகுதியில் உள்ள முன்னுரிமை பெற்றவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, காவல்துறையினரின் உதவியுடன், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இதுபோன்ற முகாம்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை முற்றிலுமாக தடுத்து நிறுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story