தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் கடிதம்


தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 5 Jun 2021 4:24 PM GMT (Updated: 5 Jun 2021 4:24 PM GMT)

தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, 

நீட் தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள், அவற்றை சரி செய்யும் வழிமுறைகள், மாற்று சேர்க்கை முறை - சட்ட வழிமுறைகளை அரசுக்கு பரிந்துரை செய்திட ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படுகிறது.  சமூகநீதியை நிலைநாட்டும் வரலாற்று கடமை நமக்கு உண்டு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், “ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு முறையால் நமது மாநிலத்தில் உள்ள கிராமப்புற நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ்வழியில் கல்வி பயில்வோர் போன்ற நமது சமுதாயத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலை உள்ளதாக கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனை கருதியே, சமூக நீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறை கைவிடப்பட வேண்டுமென்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி 12-வது வகுப்பு இறுதி தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவ கல்லூரி இடங்கள் நிரப்பப்பட வேண்டுமென்றும் தொடர்ந்து வலியுறுத்தி இதற்கான பல சட்ட போராட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.

சமூகநீதியை நிலைநாட்டும் வரலாற்று கடமை தமிழ்நாட்டிற்கு எப்போதும் உண்டு இந்த கடமையை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வு முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்திட உறுதி பூண்டுள்ளது. 

இந்த நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை சரி செய்யும் வகையில் இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைகளை அளித்திட ஓய்வு பெற்ற நீதியரசர் திரு ஏ.கே. இராஜன் அவர்கள் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலை குழு ஒன்று அமைக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில், மாநில கல்வி திட்டத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story