சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு ஆண் சிங்கம் உயிரிழப்பு


சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு ஆண் சிங்கம் உயிரிழப்பு
x
தினத்தந்தி 16 Jun 2021 10:11 AM GMT (Updated: 16 Jun 2021 10:11 AM GMT)

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு ஆண் சிங்கம் உயிரிழந்துள்ளது.

சென்னை

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் மனிதர்களிடையே வேகமாக பரவ தொடங்கியது. விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.  முதலில் அமெரிக்கா நியூயார்க் சிட்டியில் உள்ள டிரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் புலி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மே மாதம் முதல் முறையாக ஐதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வரும் காரணத்தால் சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஏப்ரல் மாதம் 20-ந்தேதி முதல் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 26-ந்தேதி  சென்னை வண்டலூரில் பூங்காவிலுள்ள சிங்கங்களுக்கு தொடர் இருமல் இருப்பது ஊழியர்கள் மூலம் தெரியவந்தது. அதன் பின்னர் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் அன்றைய தினமே உடல் சோர்வுடன் காணப்பட்ட சிங்கங்களின் சளி மாதிரிகள் சேகரித்து மத்திய பிரதேச மாநிலம் போபலில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் தேசிய நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனை முடிவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 வயது உடைய நீலா என்ற பெண் சிங்கம் இறந்துவிட்டது.  மேலும் 2 பெண் சிங்கங்களின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்து வருகிறது.

தற்போது சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு ஆண் சிங்கம் உயிரிழந்துள்ளது.

Next Story