யூடியூப்பில் ஆபாசமாக பேசிய வழக்கு: பப்ஜி விளையாட்டு மதன் அதிரடி கைது போலீசார் காலில் விழுந்து கதறி அழுதார்


யூடியூப்பில் ஆபாசமாக பேசிய வழக்கு: பப்ஜி விளையாட்டு மதன் அதிரடி கைது போலீசார் காலில் விழுந்து கதறி அழுதார்
x
தினத்தந்தி 19 Jun 2021 2:20 AM GMT (Updated: 19 Jun 2021 2:20 AM GMT)

யூடியூப்பில் பப்ஜி விளையாட்டின் போது, ஆபாசமாக பேசிய மதன் போலீசாரால் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அப்போது மதன், தான் தவறு செய்து விட்டதாக போலீசார் காலில் விழுந்து கதறி அழுதார்.

சென்னை, 

யூடியூப் வீடியோ சேனலில் பிரபலமானவர் மதன் (வயது 29). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டை தனது யூடியூப் சேனலில் தொடர்ந்து நடத்தி வந்தார். அவர் தனது யூடியூப் சேனலில் பெண்களை பற்றியும், அவர்களது அங்கங்களை பற்றியும் ஆபாசமாக பேசி கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வந்தார். இதன் மூலம் அவருக்கு லட்சக்கணக்கில் பணம் கொட்டியது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை வடபழனியைச் சேர்ந்த அபிஷேக்ரபி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் புகார் கொடுத்தார்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோர் மேற்பார்வையில் சைபர் கிரைம் உதவி கமிஷனர் வேல்முருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

மதன் மீது 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்ய சைபர் கிரைம் தனிப்படை போலீசார், அவரது சொந்த ஊரான சேலம் விரைந்தனர். சேலத்தில் அவர் இல்லை. சென்னையை அடுத்த வேங்கைவாசலில் மதனின் மனைவி கிருத்திகா (25) வசித்து வந்தார். அவர் என்ஜினீயரிங் பட்டதாரி. மதனின் யூடியூப் மன்மத விளையாட்டுகளுக்கு கிருத்திகாவும் துணையாக செயல்பட்டுள்ளார்.

இதனால் அவரை அவரது 8 மாத கைக்குழந்தையுடன் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரை வரும் 30-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் அவர் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மதனை தொடர்ந்து போலீசார் தேடி வந்தனர்.

மதன் தர்மபுரியில் அவரது நண்பர் வீட்டில் தங்கி இருப்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உதவி கமிஷனர் துரை, இன்ஸ்பெக்டர் வினோத் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார், நேற்று காலை மதனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர் உடனடியாக சென்னை அழைத்து வரப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் இருந்து ஆடி சொகுசு கார், 4 லேப் டாப்கள் மற்றும் டிரோன் கேமரா ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

மதனை போலீசார் கைது செய்த போது, எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்து விட்டது. மதன் திடீரென்று போலீசார் காலில் விழுந்து கதறி அழுதார். நான் தவறு செய்து விட்டேன், என்று ஏங்கி, ஏங்கி அழுதார். இப்போது அழுது பயன் இல்லை, சட்டம் உங்களை சும்மா விடாது, என்று கூறி போலீசார் அழைத்து வந்தனர்.


Next Story