ஜப்பான் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி


ஜப்பான் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி
x
தினத்தந்தி 20 Jun 2021 9:21 PM GMT (Updated: 20 Jun 2021 9:21 PM GMT)

ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

சென்னை,

தமிழகத்தை சேர்ந்த பவானி தேவி, தமிழகத்தின் பாரம்பரிய கலையான வாள்வீச்சில் பயிற்சி பெற்று உலக அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார். அவரின் ஊக்கத்தினையும், விடாமுயற்சியினையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தில் “விளையாட்டு அலுவலர்” பதவி வழங்கப்பட்டுள்ளது. பவானி தேவி தற்போது ஜப்பான் நாட்டின், டோக்கியோ மாநகரில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவர் தேவையான பயிற்சிகள் பெற அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. அவர் தற்போது இப்போட்டிக்காக இத்தாலி நாட்டில் பயிற்சி பெற்று வருகிறார். மேலும் சில பயிற்சிகள் பெற பவானி தேவி தமிழ்நாடு அரசிடம் ரூ.5 லட்சம் நிதியுதவி கோரியிருந்தார்.

மு.க.ஸ்டாலின் நிதி உதவி

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், பவானி தேவியின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அவரை ஊக்குவிக்கும் வகையில், நேற்று சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அவரது தாயாரிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, தயாநிதி மாறன் எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தித் துறை முதன்மைச்செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வீராங்கனை பவானிதேவி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இத்தாலியில் இருந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளதால் சிறப்பு பயிற்சிக்காக நான் இப்போது இத்தாலியில் இருக்கிறேன். எனது சிறப்பு பயிற்சிக்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கியிருக்கிறார். எனது பயிற்சிக்கு அந்த நிதி உதவி மிகவும் உதவிகரமாக இருக்கும். அதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் பணிபுரியும் மின்சாரத்துறையின் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். உயர் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். உங்களது ஆதரவும், ஊக்குவிக்கும் போக்கும் எங்களுக்கு உந்து சக்தியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story