நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகாரில் வழக்கு: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூருவில் கைது


நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகாரில் வழக்கு: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூருவில் கைது
x
தினத்தந்தி 20 Jun 2021 11:18 PM GMT (Updated: 20 Jun 2021 11:18 PM GMT)

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து கோர்ட்டு உத்தரவின்படி ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

சென்னை,

சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் சினிமா படத்தில் நடித்துள்ளார். மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்றவர். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், ‘மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு கொண்டார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்’ என்று தெரிவித்து இருந்தார். எனது அந்தரங்க ஆபாச புகைப்படங்களை வெளியிடுவேன், என்று பயமுறுத்துவதாகவும், புகாரில் குற்றம் சாட்டி இருந்தார்.

6 பிரிவுகளில் வழக்குப்பதிவு

இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மணிகண்டன் மீது கற்பழிப்பு உள்பட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆகிவிட்டது. நடிகை சாந்தினி தனக்கு மணிகண்டனால் நேர்ந்த கொடுமை குறித்து மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் கொடுத்தார். மணிகண்டனுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டது.

சாந்தினியை கருக்கலைப்பு செய்த டாக்டரிடம் விசாரித்தனர். கருக்கலைப்பு செய்தது உண்மை என்பது அதில் நிரூபணம் ஆகி விட்டது. வழக்கில் சம்ப ந்தப்பட்ட அனைத்து சாட்சிகளிடமும் விசாரணை முடிந்து விட்டது.

பெங்களூருவில் கைது

இதனையடுத்து மணிகண்டனை கைது செய்ய 4 தனிப்படைகள் களத்தில் இறக்கப்பட்டனர். அவர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. அதன் பேரில் பெங்களூரு சென்ற தனிப்படை போலீசார், நேற்று காலை 8 மணி அளவில் அவரை கைது செய்தனர். பின்னர் போலீஸ் வாகனம் மூலம் சென்னை அழைத்து வந்தனர்.

நேற்று மாலை 4 மணி அளவில் அவர் சென்னை அழைத்து வரப்பட்டார். அடையாறு போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது உதவியாளர்கள் இருவரையும் வரவழைத்து, அவர்கள் முன்னிலையில் மணிகண்டனின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. மணிகண்டன் சொன்னது சரியான தகவலா, என்பதை சோதிப்பதற்காக இது போன்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜெயிலில் அடைப்பு

இதற்கிடையில் மணிகண்டன் நேற்று இரவு சைதாப்பேட்டை 17-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூலை 2-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் அவர் சைதாப்பேட்டை ஜெயிலில் அவர் நேற்று இரவு அடைக்கப்பட்டார்.

Next Story