தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 23 Jun 2021 11:57 AM GMT (Updated: 23 Jun 2021 11:57 AM GMT)

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. இந்தியாவில் அந்த வகையில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’ வைரசுக்கு காப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் உலக சுகாதார நிறுவனத்தால் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இந்த டெல்டா வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, இந்த டெல்டா வைரஸ் தற்போது உருமாறி உள்ளது. உருமாறிய டெல்டா வைரஸ் டெல்டா-பிளஸ் என அழைக்கப்படுகிறது. டெல்டா பிளஸ் அல்லது AY.1 என அழைக்கப்படும் இந்த வகை உருமாறிய வைரஸ், எளிதாக பரவக்கூடியது, நுரையீரல் அணுக்களுடன் எளிதாக தாக்கக்கூடியது, தொற்று பாதித்தவருக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கு எதிராக செயல்படுவது, வைரஸை அழிக்கக் கூடிய எதிர்ப்பணுக்களை மீறி செயல்படும் தன்மைகளைக் கொண்டது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துளளது. இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு டெல்டா பிளஸ்  வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்திலும் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இந்ததகவலை தெரிவித்துள்ளார்.  ஆயிரத்திற்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாது. இன்னும் 6 முதல் 8 வாரங்களில் அதை எதிர்கொள்ள நேரிடும் என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரஞ்சித் குலேரியா கூறியிருந்த நிலையில் தற்போது டெல்டா பிளஸ் பரவல் அச்சமூட்டுவதாக அமைந்திருக்கிறது.

Next Story