கொரோனாவுக்கு கணவர் இறந்ததால் சோக முடிவு மகன்-மகளை கொன்று பெண் தற்கொலை


கொரோனாவுக்கு கணவர் இறந்ததால் சோக முடிவு மகன்-மகளை கொன்று பெண் தற்கொலை
x
தினத்தந்தி 25 Jun 2021 11:05 PM GMT (Updated: 25 Jun 2021 11:05 PM GMT)

கொரோனாவுக்கு கணவர் இறந்ததால், மகன், மகளை கொன்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு,

ஈரோடு திண்டல் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 67). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருக்கு ஹரிஹரன் என்ற மகனும், நித்யா (37), ரம்யா என்ற 2 மகள்களும் இருந்தனர். நித்யாவிற்கு சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் (40) என்பவருடன் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

பாஸ்கர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் முதன்மை மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு மகதி (11) என்ற மகளும், யாதவ்கிருஷ்ணன் (6) என்ற மகனும் இருந்தனர். மகதி மாங்காடு பப்ளிக் பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பும், யாதவ் கிருஷ்ணன் 1-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

கொரோனாவுக்கு பலி

இந்தநிலையில் கடந்த மாதம் 2-ந்தேதி பாஸ்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 9-ந்தேதி பரிதாபமாக இறந்தார்.

கணவர் இறந்ததால் மனம் உடைந்த நிலையில் இருந்த நித்யா தனது மகன் மற்றும் மகளை அழைத்துக்கொண்டு ஈரோடு திண்டலில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்தார். நித்யாவிற்கு அவரது பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர். எனினும் கணவரின் பிரிவை தாங்க முடியாத நித்யா மனவேதனையுடன் காணப்பட்டார்.

அளவுக்கு அதிகமாக...

இந்தநிலையில், நேற்று முன்தினம் மதியம் நித்யா தனது மகள் மற்றும் மகனுக்கு உணவு கொடுத்தார். சாப்பிட்டு முடித்த பின்னர் மகன், மகளை அழைத்துக்கொண்டு ஒரு அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து நித்யா தனது 2 குழந்தைகளுக்கும் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை கொடுத்துள்ளார். இதனால் சிறிது நேரத்திலேயே குழந்தைகள் 2 பேரும் மயங்கி விழுந்தனர். பின்னர் மீதமிருந்த மாத்திரைகளை நித்யா விழுங்கினார். இதனால் அவரும் மயக்கம் அடைந்தார்.

இதற்கிடையில் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் பார்த்தசாரதி கதவை தட்டியுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பார்த்தசாரதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

3 பேர் சாவு

அப்போது மகள் நித்யா, பேத்தி மகதி, பேரன் யாதவ்கிருஷ்ணன் ஆகியோர் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 3 பேரும் அடுத்தடுத்து இறந்தனர். சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story